Breaking
Fri. Apr 26th, 2024
மன்னார் மாவட்டத்திலுள்ள வங்காலை என்ற கத்தோலிக்க தமிழ் கிராமத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலையம் மற்றும் கடற்படைமுகாம் ஆகிய இடங்களில் புதிதாக புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளமைக்கு  அப்பகுதி மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இக்கிராமம் போர்க்காலத்தில் தள்ளாடி இராணுவமுகாம் பாதுகாப்பிற்கெனக் கூறி மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். பலத்த போராட்டத்தின் பின் மீண்டும் அப்பகுதி மக்கள் மீளக்குடியேறியிருந்தனர்.

இப்பகுதியில் கடற்கரையோரமாக கடற்படைமுகாம் ஒன்றும், குடியிருப்புக்களின் மத்தியில் இன்னொரு கடற்படை முகாமும் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளன.

இது தவிர பொலிஸ் நிலையம் ஒன்றும் கடற்படை முகாமிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே கடற்படை முகாம் ஒன்றில் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டாயிற்று.

இன்று பொலிஸ் நிலையத்தில் புத்தர்சிலை ஒன்று நிறுவுவதற்கான செயற்பாடு மும்மரமாக நடைபெற்று வருகின்றன.

பாரம்பரியமாக கிறிஸ்தவர்களைக்கொண்ட இக்கிராமத்தில் பௌத்தர்கள் எவரும் இல்லாத நிலையில் இவ்வாறு புத்தர் சிலைகள் அமைப்பது அப்பகுதிமக்களை சீண்டிப்பார்க்கின்ற ஒரு விடயமாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.

பொலிஸ் நிலையமும் கடற்படை முகாமும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டதா? அல்லது புத்த சமயம் பரப்புவதற்கு அமைக்கப்பட்டதா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு இவ்வாறு திமிர்த்தனமாக கத்தோலிக்க மக்கள் வாழும் இக்கிராமத்தில் புத்தர்சிலைகளை அமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

படைத்தரப்பின் இவ்வாறான நடவடிக்கைகளை  உடன் நிறுத்துவது நல்லது. பொலிஸ் நிலையத்தாலோ அல்லது கடற்படை முகாமினாலோ இப்பகுதி மக்களிற்கு உபத்திரமே ஒழிய எதுவித நன்மையும் இதுவரையில் இல்லை என்பது இங்கு  குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *