Breaking
Fri. Apr 26th, 2024

(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்)

நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையான  வாக்குரிமையை பறிக்க இடமளிக்க முடியாது. எனவே உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்தி மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என சபையில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பியதால் அரச தரப்பிற்கும் எதிர்தரப்பினருக்குமிடையான கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

 

 கடந்த பாராளுமன்ற அமர்வின் போது கொழும்பு  மாவட்ட ஐ.ம.சு.முன்னணி எம்.பி.தினேஷ் குணவர்த்தன உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பில் முன்வைத்த 23இன் கீழ் இரண்டில் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இன்று வெள்ளிக்கிழை சபையில் பதில் வழங்கியதையடுத்தே இருதரப்பிற்குமிடையே கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதிலில்  எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியடையாமலில்லை. எனவே உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்த முடியாது.

எனவே இவ்விடயத்தில் அரசுக்கு எந்தவிதமான உள்நோக்கங்களும் கிடையாது. அத்தோடு கடந்த ஆட்சிக் காலத்தில் பஷில் ராஜபக் ஷவின் தேவைக்கமையவே எல்லை நிர்ணயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமரின் இந்தப் பதிலை ஏற்காத  தினேஷ் குணவர்த்தன எம்.பி. எல்லை நிர்ணய சபையின் கால எல்லை பல தடவைகள் நீடிக்கப்பட்டுள்ளன. இது தேர்தலை தள்ளிப்போடுவதற்கான ஒரு உபாயம் என்பது அனைவருக்கும் தெரியும்.

கடந்த வருடம் உள்ளூராட்சி சபைகளுக்கான காலம் முடிந்துவிட்டது. 300க்கும் மேலான உள்ளூராட்சி சபைகள் தற்போது கலைக்கப்பட்டுள்ளன.

ஜனநாயகத்தின் அடிப்படை உள்ளூராட்சி சபைகளில் தான் உள்ளது. எனவே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை தள்ளிவைக்கும் உடன்பாட்டை அரசு இனியும் தொடரக்கூடாது. உடனடியாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றார்.

இதனையடுத்து சபையில் எழுந்த ஜே.வி.பி எம்.பி.அநுர குமார திஸாநாயக்க பல உள்ளூராட்சி சபைகளில் இன்று மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் மக்கள் தமக்கான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எனவே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

இதனால் எல்லை நிர்ணயத்தை காட்டி காலத்தை கடத்தாது வழமையான முறைமையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தமது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை  தீர்த்துக் கொள்ள கால அவகாசம்   தேவைப்படுவதாலேயே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலொன்றை நவம்பர் மாதம் வரை ஒத்திவைக்க முயற்சிக்கின்றீர்கள்.

இதன் போது குறுக்கிட்ட உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்துக் கொண்டு எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டதன் விளைவையே நாம் இப்போது அநுபவிக்கின்றோம்.

கடந்த ஆட்சியில் எல்லை மீள் நிர்ணயங்கள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. எனவே தான் தற்போது எமக்கு 2000க்கும் மேல் மேன்முறையீடுகள் கிடைத்துள்ளன.

பல தொகுதிகளின் எல்லைகளை மாற்ற வேண்டியுள்ளது. சகல இடங்களிலும் எல்லைகள் காடுகள் ஊடாகவும் பல இடங்களில் சுவர்கள் ஊடாகவும் செல்கின்றன. எனவே எல்லைகளை சரியான வகையில் மீள் நிர்ணயம் செய்ய எனக்கு கால அவகாசம் தேவை.

எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டதன் பின்னரே உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியும் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *