Breaking
Sat. May 18th, 2024

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தங்களது கோரிக்கையினை வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை கவன ஈர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த ஒரு வாரமாக மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்று இந்த கவன ஈர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர்.

கடந்த ஒரு வாரமாக தாங்கள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்திற்கு எதுவித பதிலையும் அரசாங்கம் வழங்காமல் இருப்பதை கண்டித்து இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டதுடன் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சருக்கு எதிராகவும் கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது கோசங்கள் எழுப்பப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கையினை கிழக்கு மாகாணசபையும் மத்திய அரசாங்கமும் எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

சவப்பெட்டியை வைத்து ஆர்ப்பாட்டத்தினை நடாத்திய வேலையற்ற பட்டதாரிகள் அதனை சுமந்தவாறு காந்தி பூங்காவில் இருந்து பேரணி ஆரம்பித்து பிரதான பஸ் நிலையம் ஊடாக மைக்கல் கல்லூரி, சிசிலியா பெண்கள் பாடசாலை, மத்திய கல்லூரி ஊடாக மட்டக்கள்பு மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மகஜர் ஒன்றும் கையளித்தனர்.

இந்த பேரணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகள் கலந்துகொண்டதுடன் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதேநேரம் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கமும் அதன் உறுப்பினர்களும் இந்த பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *