Breaking
Fri. May 3rd, 2024

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)

அரசியலில் பதவி என்னும் தனது இலக்கை அடைந்துகொள்வதற்காக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான அரசியல் கதைகளை கூறிவருவது சிலருக்கு பழக்கப்பட்டுப்போன ஓர் விடயமாகும். அந்தவகையில் இப்போது வேதாந்தி அவர்கள் மீண்டும் முஸ்லிம் சமஷ்டி பற்றி வலியுறுத்தி புத்தகம் எழுதியுள்ளார்.

தமிழரசு கட்சியை தந்தை செல்வா அவர்கள் ஆரம்பிக்கும்போதே தமிழர்களுக்கு சமஸ்டி முறையில் அரசியல் தீர்வினை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், அவர் மரணிக்கும் வரைக்கும் அந்த கொள்கையில் இருந்து சிறிதேனும் தடம்புரலவில்லை.

தந்தை செல்வாவுக்கு பின்பு வந்த ஆயுதப்போராட்ட தலைவர்கள் தவிர்ந்த, தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் அதே கொள்கையினையே வலியுறுத்தி வந்தார்கள். ஆனால் ஒருபோதும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையோ அல்லது அமைச்சர் பதவியையோ தமிழ் தலைவர்கள் சிங்கள ஆட்சியாளர்களிடம் கேட்டு மண்டியிட்டதுமில்லை, அதற்காக பின்கதவால் சென்றதுமில்லை.

பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரசினை கட்டியமைப்பதில் வேதாந்தியின் பங்களிப்பு பிரதானமானது. அவர் தலைமைக்கு கட்டுப்பட்டு கட்சியின் கொள்கையில் பயணிக்காது தான் தலைமைத்துவத்தினை கைப்பெற்றுவதற்கான அடித்தளம் ஒன்றினை பலமாக அமைத்ததனால், தலைவர் அஸ்ரபினால் கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டார்.

பின்பு முஸ்லிம் காங்கிரசின் கொள்கையில் இருந்து தடம்புரண்டு முற்றிலும் அதற்கு மாற்றமான கொள்கையில் தனது அரசியல் பயணத்தினை மேற்கொண்டார். இறுதிவரைக்கும் தனது அடிப்படை கொள்கையில் உறுதியாக பயணித்திருந்தால் மக்கள் அவரை நம்பியிருப்பார்கள். ஆனால் காலத்துக்கு காலம் தனது தேவைக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றிக் கொண்டதனால் அவரை மக்கள் நிராகரித்தனர்.

முஸ்லிம் காங்கிரசின் தோற்றத்துக்கு பின்பு முஸ்லிம்கள் மத்தியில் பிரதேசவாதம் முடியுமான அளவு துடைத்தெறியபட்டிருந்ததானது, வேதாந்தியின் வெளியேற்றத்துக்கு பின்பு மீண்டும் கொடிய பிரதேசவாதம் முடுக்கிவிடப்பட்டது.

அதாவது முஸ்லிம் காங்கிரஸ் எமது மதமல்ல என்றும், கலியோடை பாலம் வரையில் எல்லையிட்டு பிரதேசவாதத்தினை தூண்டி, கலியோடை பாலத்துக்கு அப்பால் உள்ள கல்முனையானுக்கு வாக்களிப்பது ஹராம் என்றெல்லாம் அற்ப சுய அரசியலுக்காக அக்கரைப்பற்றுடன் சேர்ந்த முஸ்லிம் பிரதேசங்களை ஏனைய பிரதேசங்களிலிருந்து கூறுபோட்டு தனது அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கப்பட்டது. இந்த பிரதேசவாத சிந்தனைக்கு அக்கரைபற்று மக்கள் ஒத்துழைக்கவில்லை.

பின்பு பதவிக்காக சிங்கள தேசிய கட்சிகளின் வாசல்படி ஒவ்வொன்றிலும் ஏறி இறங்கி, இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றார். அதில் தனது கன்னி உரையாக முஸ்லிம் மக்களினால் அங்கீகரிக்கப்பட்ட பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதிகளை திருப்தி படுத்தும் விதத்தில் கவிதை நடையில் வசைபாடி பேரினவாதிகளின் பாராட்டினை பெற்றிருந்தார்.

பெருந்தலைவரின் மரணத்துக்கு பின்பு அவரது மனைவி பேரியல் அஸ்ரபுடன் அரசியல் செய்து மீண்டும் தனது பதவியினை உறுதிப்படுத்திக்கொண்டார். பேரியல் அஸ்ரபின் வீழ்ச்சிக்கு பின்பு தனது எதிர்கால அரசியலை எவ்வாறு கொண்டு செல்வது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்த வேதாந்தி அவர்கள் இளைஞ்சர்கள் மத்தியில் முகநூல் பாவனையின் தாக்கத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்த முற்பட்டார்.

அந்தவகையில் கிழக்கின் எழுட்சி என்ற கோசத்தினை முன்வைத்து, முஸ்லிம் காங்கிரசுக்கு தலைவராக கிழக்கில் உள்ளவரே இருக்க வேண்டும் என்றெல்லாம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அந்த பிரச்சாரங்கள் முகநூல் மூலமாக மட்டுப்படுத்தப்பட்டதே தவிர, அது மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தவில்லை.

எனவேதான் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் என்ற கதைக்கு அமைய தனது அத்தனை அரசியல் திருகுதாளங்களும் மக்களிடம் செல்லுபடியாகாது என்ற காரணத்தினாலும், தனது பிரதேசவாத சிந்தனை மற்றும் கிழக்கின் எழுட்சி போன்றவைகள் தோல்வி அடைந்ததாலும் மீண்டும் முஸ்லிம் சமஷ்டி கோசத்தினை தூக்கி பிடித்துள்ளார்.

முஸ்லிம் சமஷ்டி என்பதனை யாரும் நிராகரித்துவிட முடியாது. ஆனால் வேதாந்தி அதனை இப்போது கூறவருகின்றதுதானது அவரது இழந்துபோன அரசியல் இருப்பை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான தந்திரோபாயமாக பார்க்கப்படுகின்றது.

எத்தனை இழப்புக்கள் வந்தாலும், எத்தனை அவமானங்கள் வந்தாலும், என்னதான் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் தனது அடிப்படை கொள்கையில் எப்போதும்போல உறுதியாக இருந்திருந்தால் வேதாந்தியின் முஸ்லிம் சமஸ்டி என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும்.

ஆனால் தனது சுயநல அரசியலுக்காக மீண்டும் அரசியல் அதிகாரத்தினை அடைந்துகொள்ளும் பொருட்டு மக்களை உசுப்பேத்தி, மக்கள் மத்தியில் தனது அரசியலை மேற்கொள்வதற்கான புதிய தந்திரோபாயம்தான் இந்த வேதாந்தியின் முஸ்லிம் சமஷ்டி என்னும் மந்திரமாகும்.

 

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *