Breaking
Thu. May 2nd, 2024

மக்களுக்கு பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வுக் கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (27) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற வீதி விபத்துக்களை நிறுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

நடைபெறுகின்ற வீதி விபத்துக்களில் பெரும்பாலானவை சாரதிகளின் அக்கறையீனம் காரணமாகவே இடம்பெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவே, பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாகவே வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும்.

அதேபோன்று கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறுகின்ற வாள் வெட்டுப் போன்ற சமூக விரோதச் செயற்பாடுகளும் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான வகையில் பொலிஸாரையும் இராணுவத்தினரையும் பயன்படுத்துவது தொடர்பாக யாரும் அலட்டிக் கொள்ளத்தேவையில்லை.

எமது மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை களைவதற்கு எமது படையினரையும் எமது இராணுவத்தினரையும் பயன்படுத்துவதில் எந்தவிதமான தவறும் கிடையாது.

எனவே வீதி விபத்துக்களையும் சமூக விரோதச் செயற்பாடுகளையும் களைவதற்கு எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் சிறப்பு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதுதொடர்பான மேலதிக அனுமதிகள் எவையும் கொழும்பில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

அத்துடன், கொரோனா பரவல், தொடர்ச்சியான மழை மற்றும் வெள்ள நிலவரம், அனர்த்த முகாமைத்துவம், விவசாயம் மற்றும் நீர்வேளாண்மைக்கு பொருத்தமான காணிகளில் வேளாண்மைகளை மேற்கொள்ளுதல், உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், மாவட்டத்திற்கு பொறுப்பான இராணுவ ஆதிகாரி, பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *