Breaking
Sat. Apr 27th, 2024

அதிகூடிய மின் பாவனையைக் கொண்ட பாவனையாளர்களுக்கான மின்சார கட்டணங்களை திருத்துவதற்கான யோசனையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், மின்சார பாவனை தொடர்பில் அனைத்து தரப்பினரும் அக்கறையுடன் செயற்பட வேண்டுமெனவும், நிறுவன மற்றும் தனிஆள் மின்சார பாவனையை குறைக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியின் தீவிரத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை. கடந்த 09 வருடங்களாக நிலவும் மின்சார கட்டண விகிதங்களை திருத்துமாறு இலங்கை மின்சார சபை பல தடவைகள் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தநிலையில் சில நிறுவனங்கள் வழமையான கட்டணத்தை விட குறைவாக செலுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த வசதியும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தினார்.

மின்சார உற்பத்தியால் நட்டம் ஏற்படுவதாகக் கூறிய அவர், மருத்துவமனைகள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள வீடுகள் தவிர்த்து விருந்தகங்கள், தொழிற்சாலைகள் போன்ற அதிக நுகர்வு கொண்ட சில நிறுவனங்களுக்கு கட்டண திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை அமைச்சரவை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.

சில உயர் நுகர்வு இடங்களின், கட்டணம் இருமடங்கு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அமைச்சர் கூறினார்.

எனவே, சூரிய சக்தி மூலமான மின்சார உதவியைப் பெறுவதே சிறந்த வழி என்று கூறிய அவர், அவற்றை கூரைகளை பொருத்துவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்,

அத்துடன் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தின் கூரைகளை சூரிய சக்தி பொறிமுறையை பொருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *