Breaking
Sat. May 4th, 2024

மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மறுதினம் கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

முன்னர் போன்று பழைய விருப்பு வாக்கு முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா? அல்லது புதிய தொகுதி முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னன்கோனினால், இதற்கான 2 மாற்று யோசனைகள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர்கள் சிலர் அறிவித்திருந்தனர்.

எனவே, குறித்த அமைச்சரவை பத்திரத்தை, கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை ஒரு வாரம் பிற்போடப்பட்டது.

இந்தநிலையில், அந்த அமைச்சரவை பத்திரம் நாளைமறுதினம் கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இதற்கமைய, தேர்தலை பழைய முறையில் நடத்துவதானால், நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ள, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான புதிய சட்டத்தை நீக்கி, பழைய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

விகிதாசார முறைமை மற்றும் கலப்பு தொகுதி முறையில் தேர்தலை நடத்துவதானால், தொகுதிவாரியாக 70 சதவீதமும், விகிதாசார முறைமையின் கீழ் 30 சதவீதமும் உறுப்பினர்களை நியமிப்பதற்கான புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கும் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இரண்டாவது யோசனையை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சிக்கு மாகாண ரீதியாக வழங்கப்படும் 2 மேலதிக ஆசனங்களுக்காக, மாவட்ட ரீதியாக இரண்டு மேலதிக உறுப்பினர்களை நியமிப்பதற்கும் குறித்த அமைச்சரவை பத்திரத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இரண்டு மாவட்டங்களை கொண்ட மாகாணங்களுக்கு, நான்கு ஆசனங்களும், மூன்று மாவட்டங்களை கொண்ட மாகாணங்களுக்கு 6 ஆசனங்களும் கிடைக்கும் வகையில் தேர்தல் சட்டம் திருத்தத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

Editor

By Editor

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *