Breaking
Sat. Apr 27th, 2024

வெளிநாடுகளில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்த 42 பேர் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.


மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்களுக்கு இடையில் நேற்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் அவசர கலந்துரையாடல் இடம் பெற்றது.


இதன் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


பிரதேசச் செயலாளர்களின் அறிக்கைகளின் படி வெளிநாடுகளில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு வந்த 42 பேர் தங்களுடைய வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


அவர்கள் வைத்திய, சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கான உணவு பொருட்களும் பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


புத்தளம் பகுதியில் இருந்து மாந்தை மேற்கு பகுதிக்கு வருகை தந்த 87 பேரும், மன்னார் நகரிற்கு வருகை தந்த 34 பேரும், முசலி பகுதியில் வருகை தந்துள்ள 49 பேரும், மடு பகுதியில் உள்ள 6 பேரும் தற்போது பொது சுகாதார பரிசோதகர்களின் காண்காணிப்பில் உள்ளனர்.


இதன் போது நாளைய தினம் மன்னார் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற போது மக்களின் தேவைகள் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் பிரதேச செயலாளர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்களில் மக்களுக்கு தேவையான வெதுப்பக பொருட்களை நாளைய தினம் முதல் மக்கள் சிரமம் இன்றி பெற்றுக்கொள்ளுதல், மாவட்டத்தில் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக ஆராயப்பட்டது.


இதன் போது மன்னார் நகர், பேசாலை, மாந்தை மேற்கு, மடு ஆகிய பகுதிகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் மக்களுக்கு வழங்கக்கூடிய வகையில் அத்தியாவசிய பொருட்கள் காணப்படுகின்றன.


எனினும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் சதொச விற்பனை நிலையம் இல்லாமை தொடர்பிலும், முசலியில் உள்ள சதொச விற்பனை நிலையத்தில் எவ்வித பொருட்களும் கையிறுப்பில் இல்லாமை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.


இதன் போது நானாட்டான் மற்றும் முசலி பிரதேச மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்து வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.


மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபார நிலையங்கள், சில்லரை வியாபார நிலையங்களுக்கு பொருட்களை பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் இவ்விடையங்களில் பிரதேசச் செயலாளர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுது.


சதொச விற்பனை நிலையங்களில் பொருட்களை மட்டுப்படுத்தி அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் பகிர்ந்து வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, பிரதேச செயலாளர்களுக்கு கண்டிப்பான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


மேலும் மக்கள் அத்தியாவசிய உணவுப்பொருட்களை அசௌகரிங்கள் இன்றி பெற்றுக்கொள்ள பிரதேச செயலாளர்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மன்னார் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரி, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *