Breaking
Tue. May 7th, 2024

மன்னாரில் முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் மன்னார் நீதி மன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர் பகுதியில் தொடர்ச்சியாக பொருட்கள் கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மன்னார் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபைக்கு கிடைக்க பெற்ற முறைப்பாடு தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று (16) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வர்த்தகர்கள் மூவரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டமையை தொடர்ந்து மன்னார் நீதவான் நீதிமன்ற நீதவான் குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

இந்த நிலையில் முட்டை 44 ரூபாய்க்கு அதிகமாகவும், கீரி சம்பா அரிசி 260 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யும் பட்சத்தில் மன்னார் நுகர்வோர் அதிகார சபையிடம் முறையிடுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

A B

By A B

Related Post