Breaking
Sun. May 19th, 2024

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இனியொரு போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் ஆதரவினை பெற முடியாது. இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் பொதுஜன பெரமுன முன்னணியினர் 07 மகாணங்களிலும் அமோக வெற்றியினை பெறுவோம். முன்னாள் வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஷ்வரன் மக்களின் ஆதரவினை பெற்று வெற்றி பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துககொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலிற்கு சுதந்திரக் கட்சியே தடையாக உள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த காலங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பழியினை சுமத்தி வந்தார் .

மாகாண சபை தேர்தலை நடத்துவற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி தற்போது குறிப்பிட்டுள்ளார். சுதந்திர கட்சியும் தேர்தலுக்கு தயார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது ஐக்கிய தேசிய கட்சி எவர் மீது பழி சுமத்தி தேர்தலை பிற்போடும்.

நாளை மாகாண தேர்தல் இடம்பெறுவதாக இருந்தாலும் எதிர்கொள்ள தயார் . தேர்தல் எம்முறையில் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். வடக்கு , கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய 7 மாகாணங்களிலும் பொதுஜன பெரமுன முன்னணியினர் அமோக வெற்றிப் பெறுவார்கள்.

தமிழ் மக்கள் தமிழ் பிரதிநிதிகளையே தெரிவு செய்வார்கள் . அது அவர்களின் அரசியல் ரீதியிலான தனிப்பட்ட உரிமை இவ்வுரிமையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வழங்கினார் என்பதை எவரும் மறுக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *