அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

புத்தளம் நகர சபை ஆளும் தேசிய மக்கள் சக்தி வசம்.

புத்தளம் மாநகர சபையினையும் ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது.

இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாநகர சபையின் முதலாவது பிரதி மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற நுஸ்கி நிசார் பகிரங்கமாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். நுஸ்கி நிசார் புத்தளம் நகர சபையின் முன்னாள் தலைவர் நஸ்மி நிசாரின் சகோதரர் ஆவார்.

புத்தளம் வாழ் பொதுமக்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட புத்தளம் மாநகர சபைக்கான முதலாவது கன்னி அமர்வு மாநகர சபையின் பொது நூலகத்தில் அமையப்பெற்றுள்ள மாநகர சபையின் சபா மண்டபத்தில், திங்கட்கிழமை (16) மாலை 03 மணியளவில் இடம்பெற்றது.

சபைக்கு தெரிவாகியுள்ள தேசிய மக்கள் சக்தியின் 07 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 04 உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 03 உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் 03 உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியின் 01 உறுப்பினர் மற்றும் பந்து சின்னம் சுயேட்சை குழுவின் 01 உறுப்பினர் என மொத்தமாக 19 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்.

சபை நடவடிக்கைகளின் போது மேயராக பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி மேயருக்கு விஜித பிரசன்ன மற்றும் நுஸ்கி நிசார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனையடுத்து நடைபெற்ற பகிரங்க வாக்களிப்பில் நுஸ்கி நிசார் 10 : 06 வாக்குகளினால் வெற்றி பெற்று பிரதி மேயராக தெரிவானார்.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் 03 உறுப்பினர்களும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இதனையடுத்து புதிய மேயர் சபையினை பொறுப்பேற்று தனது கன்னி உரையினை நிகழ்த்தினார். ஏகமனதாக தன்னை தெரிவு செய்ததற்கு நன்றி தெரிவித்த அவர், ஊரின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என தெரிவித்தார்.

புதிய மேயரையும், பிரதி மேயரையும், உறுப்பினர்களையும் வரவேற்பதற்காக அதிகளவான பொதுமக்கள் புத்தளம் பொது நூலகத்துக்கு முன்பாக திரண்டிருந்தனர்.

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகி இருந்தனர்.

Related posts

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினால் மக்கள் பாதிப்பு அமைச்சர் தெரிவிப்பு

wpengine

தாஜுடீன் கொலையுடன் பிரபல நபரின் மனைவிக்கு தொடர்பு

wpengine

மக்கள் விடுதலை முன்னணியின் மீட்புப் படையணியான செந்தாரகைப் படையணி மீண்டும்

wpengine