( ஹாபீஸ் )

அக்குறணை பிரதேசத்திலுள்ள அளவத்துகொடை மல்கம்மந்தெனிய ஜூம்மா பள்ளிவாசலுக்கருகில் பன்றி முட்களை இனந்தெரியாதோர் வீசிச்சென்றுள்ளதாக அளவத்துகொடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நள்ளிரவு இடம் பெற்றுள்ளதாகவும் சத்தம்கேட்டு அயலிலுள்ள ஒருவர் வந்து பார்த்த போது சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் முச்சக்கர வண்டியொன்றில் தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பிச் சென்றவரின் ஒருவரது கையில் வாள் ஒன்று இருந்ததாகவும் வெளியே வந்தவரை வாளைக்காட்டி மிரட்டியதாகவும் குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நள்ளிரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சற்று விழிப்பாக இருந்த நிலையில், மீண்டும் அதிகாலை சுமார் 3 மணியளவில் குறிப்பிட்ட கோஷ்டி மீண்டும் வருகை தந்ததாகவும் அயலவர்களின் விழிப்பாக இருந்தமையால் அவர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் அளவத்துகொடை பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் சந்தேகத்தின் பேரில் இதுவரை எவரும் கைதாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.