Breaking
Fri. May 3rd, 2024

தன்  வினைத் தன்னைச் சுடும் என்ற பழமொழி  செயல் வடிவம் பெறுவதை இன்று நாம் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.உட்கட்சிப்  பிளவுகளால் ஒரு காலத்த்தில் ஐக்கிய தேசிய கட்சி அடைந்த பின்னடைவு-அதன் தலைவர் எதிர்கொண்ட தலையிடி போன்றவற்றை நாம் இன்று சுதந்திரக் கட்சிக்குள் காணுகிறோம்.யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்று சொல்வது இந்த விடயத்தில் உண்மையாகின்றது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் மாற்றம் ஏற்படத் தொடங்கியது.ஜனாதிபதி பதவியை மாத்திரமன்றி  சுதந்திரக் கட்சியின்தலைவர் பதவியையும் மைத்திரி பால சிறிசேன கைப்பற்றினார்.

நாட்டில் சுமூகமான ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுபோல் சுதந்திரக் கட்சிக்கும் நல்லதொரு தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று புகழப்பட்டது.ஆனால்,ஓரிரு நாட்களில் அந்த நிலைமையைக் குழப்புவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன.

இவற்றுக்குப் பல காரணங்கள் இருந்தன.ஜனாதிபதியாகவும் சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் மைத்திரி நியமிக்கப்பட்டமையை சுதந்திரக் கட்சியில் உள்ள சிலரும் அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உள்ள சிலரும் விரும்பவில்லை.

மஹிந்தவின் ஆட்சியில்போல் மைத்திரியின் தலைமையின் கீழ் அரசியல் சுகபோகங்களை அனுபவிக்க முடியாது;ஊழல்,மோசடிகளில் ஈடுபட முடியாது;குறுக்குவழியில் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்த அவர்கள்  மைத்திரியை வெறுத்து மஹிந்தவை ஆதரித்தனர்.

மஹிந்தவின் ஆட்சி கவிழ்ந்ததும் மைத்திரியும் ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியையும் சுதந்திரக் கட்சியையும் இணைத்து இடைக்கால அரசு ஒன்றை நிறுவினர்.அந்த அரசின் செயற்பாடுகள் ஊழல்வாதிகளுக்கு எதிரானதாக இருந்தன.

இதனால், மஹிந்தவை அழைத்து வந்து சுதந்திரக் கட்சியில் இணைத்து ஆட்சியைக் கைப்பற்றுதல் இல்லாவிட்டால்  வேறு அணியாக செயற்படுதல் என்று முடிவெடுத்தனர்.மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் மஹிந்தவும் அதற்கு உடன்பட்டு களத்தில் குதித்தார்.நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகவும் தெரிவானார்.

இதனைத் தொடர்ந்து மஹிந்த தரப்பினர் மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு கடும் நெருக்குதலைக் கொடுக்கத் தொடங்கினர்.கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றுதல் அல்லது கட்சியைப் பலவீனப்படுத்துதல் என்ற திட்டத்தோடு அவர்கள் களமிறங்கினர்.

சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு மஹிந்தவாலும் அவரது சகாக்களாலும் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த அந்த அணி,ஒரு புதிய கட்சியை உருவாக்கி அதன் ஊடாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டு உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்கு  முடிவெடுத்தது.

இன்று அந்தத் தரப்பினர் தொடர்ச்சியாக மைத்திரிக்கு எதிரான-அவரது கட்சிக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இந்தப் போராட்டங்களின்மூலம் சுதந்திரக் கட்சி பலவீனமடைந்தால் அது மஹிந்த தரப்புக்கு கிடைக்கும் வெற்றியல்ல ஐக்கிய தேசிய கட்சிக்கே அந்த வெற்றி உரித்தாகும்.

இந்த வெற்றியை அடைவதற்காக பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துகின்றார் என்று சொல்லப்படுகின்றது.அரசியலில்  வெற்றி பெறுவதற்காக பிரித்தாளும் தந்திரம் பயன்படுத்தப்படுவது புதிதல்ல.இந்தப் பிரித்தாளும் தந்திரத்தின் ஊடாகவே மஹிந்த அவரது ஆட்சியைத் தக்கவைத்திருந்தார் என்பதை மறுக்க முடியாது.

மஹிந்தவின்  பிரித்தாளும் தந்திரத்தால் ஐக்கிய தேசிய கட்சியே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.பின்பு ஒருவாறு ஆட்சியைக் கைப்பற்றியபோதிலும்,தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மை ஐக்கிய தேசிய கட்சிக்கு கிட்டவில்லை.அக்கட்சி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கூட்டரசை நடத்திச் செல்கின்றபோதிலும்,தொடர்ந்தும் அவ்வாறு இருக்கமுடியாது.இனி வரும் தேர்தல்களில் எல்லாம் தனித்து ஆட்சியை அமைக்கும் நிலையை ஐக்கிய தேசிய அடைய வேண்டும்.சுதந்திரக் கட்சியை உடைப்பதுதான் அதற்கு ஒரே வழி.

ரணிலின் இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்கு இதுவாகவே சுதந்திரக் கட்சிக்குள் உட்கட்சிப் பிளவு ஏற்படத்    தொடங்கியுள்ளது.இந்த வாய்ப்பை ரணில் விக்ரமசிங்க பயன்படுத்தாமல் இருக்கமாட்டார் என்று சொல்ல முடியாது.

ஐக்கிய தேசிய கட்சி பலமடைவதற்கு-தனித்து ஆட்சி அமைப்பதற்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்றே சொல்ல வேண்டும்.இன்று மஹிந்தவுடன் சுதந்திரக் கட்சியின் அதிகமான எம்பிக்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.அவர்களால் தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போனாலும் கணிசமான பிளவை சுதந்திரக் கட்சிக்கு ஏற்படுத்த முடியும்.அது ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்குப் பெரிதும் உதவும்.

இனிவரும் அனைத்துத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பதிலும் இனி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடாது என்பதிலும் ரணில் விக்ரமசிங்க குறியாக இருக்கின்றார்.

கூட்டாச்சியின் ஊடாகவும் சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவின் ஊடாகவும் ஐக்கிய தேசிய கட்சியை வளர்த்துவிட்ட வேண்டும் என்று பிரதமர் விரும்புகின்றார்.அதற்காக அவர் மஹிந்த அணிக்கு உதவுகிறார்-சுதந்திரக் கட்சியை மேலும் பிளவுபடுத்த அவர் திரைமறைவில் இருந்து செயற்படுகின்றார் என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்பதை இதன் மூலம் எம்மால் உணர முடிகிறது.

அரசியலில் முடிச்சுப் போடுவதில் ரணில் வல்லவர் என்பது நாடறிந்த உண்மை.அவரின் காய் நகர்த்தல்களை- இராஜதந்திரத்தை இலகுவில் விளங்கிக்கொள்ளமுடியாது.சர்வதேச வலையமைப்புகளின் ஊடாக மிகவும் நிதானமாக தூர நோக்குடன் காய் நகர்த்தும் வல்லமையுள்ள ரணில் சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தாமல் இருப்பாரா என்ற கேள்வி எழுவது நியாயம்தான்.

புலிகள் தோல்வி அடைவதற்கு ரணில் நடைமுறைப்படுத்திய பிரித்தாளும் தந்திரம்தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.அவ்வளவு பெரிய பலமான அமைப்பையே பலவீனப்படுத்திய ரணிலுக்கு இந்த சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்துவது ஒன்றும் பெரிய விடயமல்ல.

[எம்.ஐ.முபாறக்]

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *