Breaking
Sun. May 19th, 2024

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார சீர்கேடுகள் தொடர்வதற்கு முக்கிய காரணம் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், இதனை நான் பகிரங்கமாகவே அறிவிக்கின்றேன் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வைத்திய நிபுணர்கள் அற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இயங்கிவருவதுடன். ஒட்டுசுட்டான் வைத்தியசாலை வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் சில நாட்களாக மூடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இதன்காரணமாக அங்கு செல்லும் வெளிநோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதுடன், புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம், நட்டாங்கண்டல் வைத்தியசாலைகளிலும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் காரணமாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு வடமாகாண சுகாதார அமைச்சர் மீது பகிரங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுகாதார சீர்கேடுகள் தொடர்வதற்கு வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன்தான் காரணம், இதனை நான் பகிரங்கமாக தெரிவிக்கின்றேன்.

வடமாகாண சுகாதார அமைச்சர் மத்திய சுகாதார அதிகாரிகளின் எடுபிடியாகவே செயற்பட்டு வருகின்றார்.

தமிழ் வைத்தியர்கள் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான், நட்டாங்கண்டல் வைத்தியசாலைகளில் சேவையாற்றுவதற்கு விருப்பத்துடன் பலர் முன்வந்தனர், எனினும் வடமாகாண சுகாதார அமைச்சர் அந்த வைத்தியர்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டார்.

வடமாகாண சுகாதார அமைச்சர் ஒரு மக்கள் பிரதிநிதி, அவர் வடமாகாணத்தில் உள்ள வைத்திய சேவைகளை சீர் செய்ய வேண்டியவர், ஆனால் மத்திய சுகாதார அதிகாரிகளின் எடுபிடியாக அவர் இருக்கின்றார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்நிலையை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும், மக்களுக்காக சேவையாற்ற அவர் முன்வரவேண்டும், தவறும் பட்சத்தில் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ந்து எழுந்து போராட்டம் நடத்துவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் அவர் இதன்போது எச்சரித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *