பிரதான செய்திகள்

சம்மந்தன் எதிர்க்கட்சி தலைவராக வந்தார்! அரசாங்கத்தை பாதுகாத்துள்ளார்.

ஐ.நா தீர்மானம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்று கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம் அல்ல. அது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் தமக்கு சாதகமான ஒரு அரசாங்கத்தை இலங்கையில் ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான தீர்மானம் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரும், தமிழ் தலைமைகளின் செயற்பாடும்” என்ற பொருளில் யாழ்.ஊடக அமையத்தில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்,

தமிழ் மக்களுடைய தலைமைகள் உறுதியாக இருந்திருந்தால் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை போட்டிருக்க முடியும். ஆனால் தமிழ் தலைமைகள் இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்கே முயற்சித்திருக்கின்றது.

அரசாங்கம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதே எதிர்க்கட்சி தலைவரின் பணியாகும்.

ஆனால் சம்மந்தன் என்ன செய்தார்? தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று எதிர்க்கட்சி தலைவராக பதவிக்கு வந்தவர், அதே மக்களுக்கு நடந்த அழிவுகளுக்கும் இழைக்கப்பட்ட கொடுமைக்கும் பொறுப்புகூறல் மற்றும் நீதி கிடைப்பதைத்தடுத்து அரசாங்கத்தை பாதுகாத்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு 2 தடவைகள் எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கப்பெற்றது. இரு தடவையும் வாய்ப்புகள் கிடைத்தும் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தாமல் மக்களிடம் பெற்ற ஆணைக்கு எதிராகவே இரு எதிர்க்கட்சித் தலைவர்களும் செயற்பட்டிருக்கின்றார்கள் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மேலும், மஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியது போல் மைத்திரி அரசாங்கத்தையும் அனுப்புவோம் என கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் கூற கூடாது. ஏனெனில் மைத்திரி அரசாங்கத்துடன் சேர்த்து சம்மந்தனையும் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என குறிப்பிட்டார்.

தனியார் நிறுவனம் ஒன்றினால் அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் மஹிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியதைபோல் இந்த மைத்திரி அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்புவார்கள் என கூறியுள்ளார்.

எங்களுடைய வயதின் அளவுக்கு அரசியல் அனுபவம் உள்ளது என அடிக்கடி கூறும் சம்மந்தனுக்கு அரசாங்கம் ஏமாற்றும் என்பது இப்போதுதான் தெரியுமா? சம்மந்தன் என்ன குழந்தையா? அரசாங்கத் தைவீட்டுக்கு அனுப்புவது தொடர்பாக அவர் பேசக் கூடாது.

அதனை மக்கள் செய்வார்கள். மைத்திரி அரசாங்கத்தை மட்டுமல்லாமல் சம்மந்தனையும், சுமந்திரனையும் சேர்த்தே மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்.

இதற்கிடையில் அரசாங்கத்தை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் என சம்மந்தன் கூறுவதற்கு காரணம் தான் மக்களுடைய பக்கம் நிற்பதாக காட்டி கொள்வதற்கே என மேலும் தெரிவித்தார்.

Related posts

டொல்பின் மீது காதல் கொண்டு! ஆறு மாதம் உறவில் ஈடுபட்ட நபர்

wpengine

21 ஆவது திருத்த சட்டத்திற்கு சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால ஆதரவு

wpengine

ரமழான் தலை பிறை மாநாடு! 6ஆம் திகதி மாலை

wpengine