Breaking
Sat. Apr 27th, 2024
தெருவோரத்தில் திரியும் நாய்களையும், பூனைகளையும் பிடித்து,
முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் என்று கூறும் நிலை.

அரசியல் வங்குரோத்துத்தனத்தையே இது வெளிக்காட்டுவதாக ஆப்தீன் எஹியா தெரிவிப்பு.

கடையாமோட்டையில் அகில இலங்கை உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்ததாக அப்பட்டமான பொய் ஒன்றை கட்டவிழ்த்து புத்தளத்தில் சரிந்து போன தனது செல்வாக்கை நிமிர்த்துவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அவரது அடிவருடிகளும் கதைகளைக் கட்டவிழ்த்துள்ளதாக வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அதி உயர்பீட உறுப்பினருமான ஆப்தீன் எஹியா அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

சுமார் 16 வருடங்களாக புத்தளம் வாழ் மக்களுக்கு அது தருவேன், இது தருவேன் என வாக்குறுதிகளைக் கூறி இந்த மக்களை இன்னும் ஏமாற்ற நினைக்கிறார் சகோதரர் ரவூப் ஹக்கீம்.

 கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இதே கடையாமோட்டைக்கு வந்து இந்த ஊரில் நகர மண்டபம் ஒன்றை அமைத்துத் தருவதாக அடிக்கல் நாட்டிச் சென்றார். அதே போன்று புளிச்சாக்குளத்தில் புத்தளம் வாழ் மக்களுக்கு வீடமைப்புத் திட்டமொன்றை உருவாக்கப்போவதாக அடிக்கல் நாட்டினார். சென்றவர் சென்றவர் தான். இந்தப்பக்கம் இப்போது தான் வந்துள்ளார்.

தேர்தலுக்குத் தேர்தல் புத்தளம் மாவட்டத்திற்கு வரும் இவர் புத்தளம் நகரத்தில் மேடை அமைத்து கூக்குரல் போட்டுச் செல்வதுண்டு. ஆனால் இப்போது கடையாமோட்டைக்கு வந்ததன் நோக்கம் மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் எழுச்சியைப் பொருக்கமாட்டாமலும், நான் அவருடன் இணைந்து பக்கப் பலமாக பணியாற்றுவதுமே.

கடையாமோட்டையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த பைஸல் என்பவர் தங்களது கட்சியில் இணைந்துவிட்டதாக இப்போது இணையதளங்களில் செய்தியை வெளியிட்டிருக்கின்றார்கள். மக்கள் காங்கிரஸில் பொறுப்பான பாத்திரம் வகிப்பவனென்ற வகையில் இந்தச் செய்தி சுத்தப்பொய் என அடித்துக் கூறுகிறேன்.

வட மேல் மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து வருடங்கள் மாகாணசபை உறுப்பினராக பதவி வகித்தவன் நான். இப்போது மு கா வில் இணைந்துள்ளதாகக் கூறும் பைஸல் என்பவர் எனது எடுபிடியாகச் செயற்பட்டவர். இதன் அர்த்தம் என்னவென்றால் அப்போது அவரொரு முஸ்லிம் காங்கிரஸ்காரர். நான் சகோதரர் ஹக்கீமின் துரோகத்தனத்தினால் அக்கட்சியிலிருந்து வெளியேறிய போதும் இந்த பைஸல் அங்கேயே இருந்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் மு கா சார்பாக பைரூஸும் மக்கள் காங்கிரஸ் சார்பாக நவவியும் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக நஸ்மியும் போட்டியிட்ட போது ஜனாப். பைஸல் பைரூசுக்கே தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டவர். எனினும் தனது வயிற்றுப் பிழைப்புக்காக நவவி, நஸ்மியிடம் முகத்தைக் காட்டியிருக்கலாம். இவ்வாறான கொள்கையுடைய பைஸலே இப்போது ஹக்கீமின் கரத்தைப் பிடித்து மு காவில் இணைந்துள்ளதாக படம் காட்டியுள்ளார்.

மக்கள் காங்கிரஸில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவர் இணைந்து பணியாற்றியவர் அல்லர் என்று எஹியா தெரிவித்தார்.

போகிற போக்கில் தெருவோரத்தில் திரியும் நாய்களையும் பூனைகளையும் பிடித்து முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துவிட்டதாக அக்கட்சிக்காரர்கள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *