நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக இயங்கும் என நாம் நம்புகிறோம். அதனை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். எனினும் அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல அரசியல் செய்ய நாம் தயாரில்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வழக்கு விசாரணைக்காக கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் நிதி குற்ற விசாரணை பிரிவினால் எமக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. எனினும் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக இயங்குவதாக நாம் நம்புகிறோம்.
எனவே நீதித்துறையின் சுயாதீன தன்மையை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். வழக்கு விசாரணைகளின்போது எமது நேர்மைத் தன்மையை நாம் நீதிமன்றத்தில் நிரூப்பிப்போம்.அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல அரசியல் செய்ய நாம் தயாரில்லை. எமக்கு என்று ஒரு கொள்கை உள்ளது.எமது பிணைப்பு மக்களுடனேயே உள்ளது.
கேள்வி – தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது கன்னி வரவு செலவுத்திட்டத்தை சமர்பித்துள்ளதல்லவா?
பதில் – ரணில் விக்கிரமசிங்கவினால் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டமே தற்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயாக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இது வரவேற்கத்தக்க விடயமாகும். எனினும் தேர்தல் காலங்களில் அவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை வாக்களித்த மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவினால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது வரவு செலவுத்திட்டத்தை மாற்றம் செய்து அவரை விட சிறப்பாக தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்துள்ளார் என்றார்.