Breaking
Sat. Apr 27th, 2024

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் விசேட அழைப்பின் பேரில் 23-05-2016 திங்கள் நண்பகல் பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூறே, வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஹபீபு முகம்மது ரயீஸ் ஆகியோர் மேற்படி பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

இன் நிகழ்வினை பாடசாலையின் அதிபர் தலைமையேற்று நடாத்தினார், நிகழ்விற்கு மன்னார் வலைய கல்விப் பணிப்பாளர் திருமதி.சுகந்தி செபஸ்டியன், அக்கிராமத்தைச் சேர்ந்த மூத்த சட்டத்தரணி சபுறுதீன் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் விசேட விஜயத்தின்போது அப்பாடசாலையின் பல்வேறுபட்ட தேவைகள் தொடர்பாகவும், அங்குள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது. அத்தோடு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வருகை தந்த வடக்கு முதல்வரால் அப் பாடசாலையின் சில அபிவிருத்திக்காக பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதும் அந்த சமயத்தில் வலயக் கல்விப்பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது. அதே வேளை இன்னும் பல தேவைகளை தன்னகத்தே அப்பாடசாலை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

d431061f-88d1-4c37-be3a-4ec17e9d0035

மேற்ப்படி நிகழ்வில் தனது கருத்துக்களை தெரிவித்த அமைச்சர் டெனிஸ்வரன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார், குறிப்பாக எமது மாகாண ஆளுநர் இன, மத, மொழி பேதங்களைக் கடந்து சேவையாற்றும் ஓர் சிறந்த மனிதன் என்றும், அதேவேளை அவருடைய வாழ்வில் அவர் ஒரு பிரதி அமைச்சராகவும், முதலமைச்சராகவும் தற்போது எமது ஆளுநராகவும் சிறப்பாக செயற்ப்பட்டுக்கொண்டு தன்னகத்தே மிகுந்த அனுபவங்களைகொண்ட ஓர் அனுபவசாலி என்பதையும்,  அத்தோடு இவ்வாறு மிகுந்த அனுபவமுள்ள, இன மத மொழி பேதமற்று தனது சேவையை வழங்கும் இந்த ஆளுநரின் ஊடாக எமது மாகாணத்தின் தேவைகளை நிறைவேற்றாவிடின் வேறு யாரை கொண்டும் நாம் நமது தேவைகளை நிறைவேற்ற முடியாது என்பதை மிகவும் ஆணித்தரமாகவும் தெளிவாகவும் ஆளுநர் முன்னிலையிலே தெரிவித்தார்.

8eb959c2-c748-47b8-be27-56fc5f979f5a

அத்தோடு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாம் தம்முடைய அமைச்சின் பணிகளுக்காக அதாவது குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவு மீனவர்களது வாழ்வாதாரப் பிரச்சினை தொடர்பாக  அவருடன் தொடர்புகொண்ட வேளையிலே மிகுந்த கருசனையோடு விடயத்தை உள்வாங்கியதோடு, அதுதொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதும் தற்போது அறியமுடிகின்றது எனவும் அத்தோடு மிக விரைவாக இரணைதீவு மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் உயரும் எனவும் மேற்ப்படி சந்தர்ப்பத்தில் அமைச்சர் டெனிஸ்வரன் தெரிவித்தார்.

இவ்வாறு இருக்கும் சந்தர்ப்பத்தில் தற்போது ஒரு சிலர் குறுகிய அரசியல் நோக்கோடும், குறுகிய ஓர் வட்டத்திற்குள் நின்றுகொண்டு சிந்திப்பவர்களாக ஆளுநரை குறைகூறுபவர்களாகவும், அவரை மாகாணத்தில் நின்று வெளியேற்றவேண்டும் என்ற நோக்கில் குற்றம் சுமத்திவருகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் மாகாணத்திற்கு வருகின்ற சகல ஆளுநர்களையும் குறை கூறுகின்றோமெனில் பிழை எங்கே இருக்கின்றது என்பதை நாம் முதலில் இனம்காண வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தை நான் நினைவுகூர விரும்புகிறேன் அதாவது ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்று சொல்லும் கதைபோல இருப்பதாகவும் தெரிவித்ததோடு, முன்னைய ஆளுநர்கள் எவ்வாறானவர்களாக இருந்திருப்பினும் தற்போதைய ஆளுநரை நாம் சரியான முறையிலே விளங்கிக்கொண்டு, அவருடன் இணைந்து நமது மாகாணத்தின் அபிவிருத்திகளை முன்னெடுக்க முனையவேண்டும் என்றும், அத்தோடு எமது இனத்தின் அடிப்படை உரிமைகள் தொடர்பில் ஆளுநருடன் கதைப்பதில் எந்தப்பயனும் நமக்கு இல்லை என்பதை தெளிவாக உணர்ந்தவர்களாக அரசியல்வாதிகாளாகிய நாம் செயல்ப்படவேண்டும், அதாவது உரிமைகளை கதைக்கவேண்டிய இடத்திலே உரிமைகள் தொடர்பாகவும், அபிவிருத்திகள் தொடர்பில் கதைக்கவேண்டிய இடங்களில் அபிவிருத்திகள் தொடர்பாகவும் பேசுவோமெனில் நிச்சயமாக நாம் சரியாக நம்முடைய மாகாணத்தை கொண்டுசெல்ல முடியும்.

எனவே மாகாண நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் குறிப்பாக ஆளுநரிடம் நமது அபிவிருத்திகள் தொடர்பில் மாத்திரமே கதைக்கமுடியும், கதைப்பதே சாலச் சிறந்ததாகவும் இருக்கும் என்றும், நம்முடைய உரிமைகள் தொடர்பில் பிறிதொரு இடத்தில் கொண்டு சென்று சாதிக்கவேண்டும். அபிவிருத்தி மற்றும் நமது உரிமை ஆகிய இன விடுதலை ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று கலவாமல் தனித்தனியாக கொண்டு செல்லப்படவேண்டிய விடயங்கள் என்பதில் நாம் தெளிவுள்ளவர்களாக செயற்படவேண்டும்.

இவ்வாறு தூர நோக்கோடு செயற்ப்பட்டால் மாத்திரமே இவ்விரண்டையும் துரிதகதியில் நாம் அடைய முடியும் எனவே சம்மந்தப்பட்டவர்கள் இந்த இரண்டு விடயங்களையும் சரியான முறையிலே கையாள்வோமெனில் நமது இனத்தின் விடிவையும், மாகாணத்தின் அபிவிருத்தியையும் விரைவாக அடைவது சாத்தியம் எனவே எல்லோரும் இவ்விடயங்களில் கைகோர்த்து ஒற்றுமையோடு செயற்ப்பட்டு வெற்றி காணவேண்டும் என்றும் தெரிவித்தார்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *