Breaking
Sun. May 5th, 2024

(ஊடகப்பிரிவு)
அம்பாறை ஆலையடி வேம்பு பிரதேசத்தில் ஒரு மினி ஆடைத் தொழிற்சாலை அமைப்பதற்கும் அந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதார முயற்சிகளை மேம்படுத்துவதற்குமென சுமார் 50 பேருக்கு சுயதொழில் வாய்ப்புக்களுக்கான உதவிகளை நல்குவதற்கும் தாம் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஆலையடி வேம்பு பிரதேசத்தில் படித்துவிட்டு தொழில்வாய்ப்பின்றி வீடுகளில் முடங்கிக்கிடக்கும் இளைஞர் யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எதிர்வரும் காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவர் உறுதியளித்தார்.

ஆலையடி வேம்புப் பிரதேசத்திலுள்ள பெண்களும், யுவதிகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆலையடி வேம்பு மத்திய குழுத் தலைவர் தாமோதரம் ஜெயாகர் தலைமையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு நாவற்குடாவில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஆலையடி வேம்பு நாவற்காடு வட்டாரக்குழுத் தலைவி சுதாமதி, வாச்சிக்குடா மக்கள் காங்கிரஸின் வட்டாரக் குழுத்தலைவி காஞ்சனா உட்பட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு இந்தப் பிரதேச தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களை விலாவாரியாக எடுத்துரைத்தனர்.
“தேர்தலுக்குத் தேர்தல் இங்கு வந்து எமது வாக்குகளை பெற்று எம் பியாகுவோர் அதன் பின்னர் எமது கஷ்டங்களை தீர்த்து வைப்பதில்லை. இந்தப் பிரதேசத்தில் மக்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இந்த நிலை இன்று, நேற்று அல்ல. காலா கலமாக தொடர்ந்து வருகின்றது.
யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த எங்களை சுனாமியும் விட்டு வைக்கவில்லை.

அதன் பின்னர் அடிக்கடி இங்கு ஏற்படுகின்ற பெரு வெள்ளத்தினால் நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு வாழ்வை சீரழித்து நிற்கின்றோம் எனவே எங்கள் மக்கள் வாழ்வாதாரத்தை வளப்படுத்த உதவி புரியுங்கள்” இவ்வாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

”அகில் இலங்கை மக்கள் காங்கிரஸில் நாங்கள் இணைந்துள்ளோம். இந்தக் கட்சியை முஸ்லிம் கட்சியென்றே நாங்கள் முன்னர் எண்ணியிருந்தோம். ஆனால் அக்கட்சித்தலைவரின் செயற்பாடுகள் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் வியாபித்து நிற்கின்றது. எவருடைய தூண்டதிலின் பெயரிலோ, எவருடைய வேண்டுதலின் பெயரிலோ, நிர்ப்பந்தத்தின் காரணமாகவோ நாம் இந்தக் கட்சியில் இணையவில்லை.
எமது சொந்த விருப்பில் நாமாகவே வலிந்து வந்து இக்கட்சியில் இணைந்து எதிர்காலப் பயணத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் சந்திப்பின் போது தெரிவித்தனர்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன், பிரதியமைச்சர் அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப் எம் பி , கட்சியின் முக்கியஸ்தர்களான எஸ் எஸ் பி மஜீத், என் எம் நபீல், உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *