Breaking
Sat. May 4th, 2024

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்டத்தில் அதிருப்தி யுற்ற சமுர்த்தி பயனாளிகள் மன்னாரில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நலன்புரி நன்மைகள் சபையினால் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருக்கும் புதிய சமுர்த்தி பயணாளிகளை அடையாளப்படுத்தும் மதிப்பீட்டு அறிக்கையில் விடுபட்ட,மற்றும் உள்வாங்கப்படாத பயனாளிகள் இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

நலன்புரி நன்மைகள் சபையினால் வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில் பணம் வசதி உடைய மற்றும் மாடி வீடுகளில் வசிப்பவர்களும் உள்வாங்கப்பட்டிருப்பதாகவும் ஆனால் தேவையுடைய மாற்றுத்திறனாளிகள், விதவைகள்,சிறு நீரக நோயாளிகள் உட்பட பலரின் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனவும் குறித்த பட்டியல் பொருத்தமற்றது என தெரிவித்தும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

நாட்டில் ஏற்கனவே பொருளாதர நெருக்கடி விலைவாசி அதிகரிப்பினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாசவின் வீட்டுத்திட்டத்தினால் கடனாளிகளாக உள்ளதாகவும் இன்னும் பல பெண்கள் நுண் நிதி நிறுவனக்களில் கடன் பெற்றே வாழும் இவ்வாறான நிலையில் சமூர்த்தி கொடுப்பனவு பட்டியலிலும் தங்கள் பெயர் நீக்கப்பட்டமை தங்களை ஏழ்மையில் தள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் வேலை எனவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்து பிரதேச செயலகத்திற்கும் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் மன்னார் நகர் பிரதேச செயலாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் புதிய நடைமுறை தொடர்பிலும் தெளிவுபடுத்திதிருந்தார்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கோரிக்கை தொடர்பில் தாங்கள் பரீசிலிப்பதாகவும் பட்டியலில் விடுபட்டு சமூர்த்தி பொறுவதற்கான தகுதியுடைய நபர்கள் மேன் முறையீட்டை மேற்கொள்ளுமாறும் தகுதி அற்ற ஆனாலும் சமூர்த்தி பட்டியலில் பெயர் குறிப்பிட்டுள்ள நபர்கள் எவரேனும் இருப்பின் அவர்கள் தொடர்பிலும் முறைப்பாடு வழங்கும் படி மன்னார் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மன்னார் மாவட்ட செயலக்த்திற்கு முன்பாகவும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

A B

By A B

Related Post