Breaking
Sun. May 19th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை)

 

நேற்றைய தொடர்ச்சி.

குற்றச் சாற்று – 02

22 இலட்சம் முஸ்லிம்களையும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுக்கும் அமைச்சர் றிஷாத் இப்போது அரசாங்கத்தில் இல்லையா? அவரது முட்டில் அரசாங்கம் தங்கியிருக்கவில்லையா? அடுத்த தேர்தலில் அவருக்கு அனைவரும் வாக்களித்து முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வோமா?

பதில்

இங்கு தான் வை.எல்.எஸ் ஹமீத் தனது புரிதலின் பற்றாக்குறையை வெளிப்படுத்துகிறார். அமைச்சர் றிஷாத் முஸ்லிம்கள் அனைவரும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைக்கின்றாரே தவிர தனது தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு அழைக்கவில்லை. இதனை வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாதின் தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுமாறு நினைத்தால் அது அவருடைய தவறாகும்.

அண்மைக் காலமாக அமைச்சர் றிஷாத் முஸ்லிம்களையும் முஸ்லிம் தலைவர்களையும் ஒன்றுபடுமாறு அழைத்தே வருகிறார். அமைச்சர் ஹக்கீமையும் அழைத்து அது பாரிய பேசு பொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ் விடயமானது அவர் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபடுமாறு அழைத்த இந்த அழைப்பு முஸ்லிம்களுக்கான பொதுவான அழைப்பாகவே பார்க்க வேண்டும் என்பதை கூறிச் செல்கிறது.

தற்போதைய அரசானது இரு பெரும் தேசிய கட்சிகள் இணைத்து ஆட்சியமைத்துள்ளது. 19ம் அரசியல் அமைப்பு சீர் திருத்தம் மூன்றில் இரண்டு பெரும் பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை உட்பட பல விடயங்கள் இவ்வரசு கொண்டுள்ள பாராளுமன்ற பலத்தின் சான்றாகும். அமைச்சர் றிஷாதின் கட்சியில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதனை வைத்துக் கொண்டு அவரால் எதுவுமே செய்ய முடியாது. இல்லை.. இல்லை.. அவரால் இவ் எண்ணிகையை வைத்துக் கொண்டு ஆட்சியை அசைக்க முடியும் என்றால் அது எவ்வாறேன வை.எல்.எஸ் ஹமீத் சற்று தெளிவு படுத்த வேண்டும்.

அமைச்சர் றிஷாத் கூறியது போன்று அனைவரும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் இணைந்தால் இவ்வரசை ஓரளவு அசைத்து பார்க்கலாம் என்பதே உண்மையாகும். இன்று அமைச்சர் றிஷாத் மாத்திரமல்ல இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் முஸ்லிம்களையும் முஸ்லிம் அரசியல் வாதிகளையும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபடுவதையே விரும்புகின்றனர். இல்லையென வை.எல்.எஸ் ஹமீத் மறுப்பாரா? அதனைத் தானே அமைச்சர் றிஷாதும் கூறினார்? இலங்கை முஸ்லிம்கள் தங்களுக்குள் ஒற்றுமையில்லாமல் பிரிந்து நிற்பதும் இன்று முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியாமைக்கான பிரதான காரணமாகும்.

குற்றச் சாட்டு – 03

இன்று பெரும்பான்மையில்லாமல் முஸ்லிம்களின் முட்டில் தங்கியிருக்கின்ற அரசு இவர்களை கால் தூசிக்கும் கணக்கெடுக்க தயாராக இல்லை.

பதில்

இவ்வரசு தனது பெரும்பான்மை பலத்தை மிக அதிகமாக நிரூபித்தே வருகிறது. அதற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை எனலாம். தற்போதைய அரசுக்கு முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காமல் போனால் பெரும்பான்மை கிடைக்காது என்பதை வை.எல்.எஸ் ஹமீத் புள்ளி விபரங்களோடு வெளிப்படுத்துவாரா?

இங்கு வை.எல்.எஸ் ஹமீத் தனது பதிலை அமைச்சர் றிஷாதின் கட்சியின் கீழ் உள்ள ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்து ஆட்சி மாற்றத்தை கொண்டு வர முடியும் என்றே நிறுவ வேண்டும். ஏனெனில், அவர் அமைச்சர் றிஷாத் அனைவரையும் ஒன்றுபடுமாறு அழைத்ததையும் விமர்சித்துவிட்டாரல்லவா?

குற்றச் சாட்டு – 04

ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார் ,முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தது முடிவெடுக்க வேண்டும் என்று அவருக்கு இருந்த உணர்வு கூட அமைச்சர் றிஷாதுக்கில்லையா?

பதில்

அமைச்சர் றிஷாத் கூறியது போன்று அனைவரும் ஒன்றிணைந்தால் தானே அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க முடியும். அனைவரும் ஒன்றிணையாமல் முடிவெடுக்க முடியுமா? பா.உ உறுப்பினர் மரைக்கார் அனைவரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறியதை விட அமைச்சர் றிஷாத் அரசை விமர்சிப்பதே கணமிக்கது. பாராளுமன்ற உறுப்பினர் மரைக்கார் அவ்வாறு கூறியதால் இது வரை எதுவும் நடந்த பாடில்லை. அதனை அனைவரும் ஏற்க மாட்டார்கள் என்பதால் அது சாத்தியமற்ற விடயம் என்பது யாவரும் அறிந்ததே. இங்கு பா.உ மரைக்கார் அனைவரையும் ஒன்று கூட்டி முடிவெடுக்க தேவையில்லை. அவரது முடிவை அனைவருக்கும் முன் மாதிரி ஆக்கலாமே?

அமைச்சர் றிஷாத் அரசை கடுமையாக விமர்சிக்கும் போது அது மக்களின் மன மாற்றத்துக்கு காரணமாக அமையும். ஏனைய அரசியல் வாதிகளுக்கு அழுத்தம் ஏற்படும். மரைக்காரின் இவ்வாறான வாய் பேச்சை விட அது கனமானது என்பதில் மறு கருத்தில்லை. இருப்பினும் மரைக்காரின் அப் பேச்சானது அரசின் மீதான வெறுப்பை வெளிக்காட்டுவதால் அவரை பாராட்டாமலும் இருக்க முடியாது. அணியும் கண்ணாடியில் தான் விமர்சனப் பாதை அமைந்திருக்கும்.

அமைச்சர் றிஷாத் இதனையாவது செய்கிறார். ஏனைய அரசியல் வாதிகள் இன்னும் அரசுக்கு கூஜா தூக்கும் வேலையை தானே செய்கிறார்கள். அது ஏன் வை.எல்.எஸ் ஹமீதின் கண்களுக்கு தெரியவில்லை. இவ்வாறான குரல் கொடுப்புக்களை யார் செய்வார்கள் என இலங்கை மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். அது இவ்வாறான பேச்சுக்களால் மழுங்கடிக்கப்பட்டு விடும்.

உங்கள் வினாக்களுக்கு பதிலை அடுக்கிக்கொண்டே செல்லலாம். இருந்தாலும் அதிக வேலை காரணமாக “நல்லது செய்வதை பாராட்டுங்கள். அதனை மழுங்கடிக்கச் செய்ய வேண்டாம்” என்ற கோரிக்கையோடு நிறைவு செய்கிறேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *