Breaking
Sat. Apr 27th, 2024

யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் மற்றும் கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதாவுல்லா ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


ஹோமாகமை – உடுவன பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தனது தேர்தல் வெற்றிக்கு பாடுபட்டவர்களுக்கு நன்றி கூறும் வைபவத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.


மேலும் கூறுகையில்,


விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தன் போன்றவர்களின் போட்டி நிறைந்த இனவாத அரசியலை வடக்கில் உள்ள மக்கள் சமூகம் படிப்படியாக நிராகரித்து வருகிறது என்பதை இம்முறை தேர்தல் முடிவுகள் காட்டின.


இதனால், அச்சமடைந்துள்ள விக்னேஸ்வரன், சம்பந்தனை விட பெரிய இனவாத வீரராக தன்னை இனங்காட்ட முயற்சிப்பது 9ஆவது நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் மூலம் தெரியவந்துள்ளது.
திருமண வைபவத்தில் போதையில் நடந்துக்கொள்ளும் நபரை தாக்கினால், அந்த வைபவத்தில் மோதலான நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பது போல அன்றைய தினம் விக்னேஸ்வரனின் உரைக்கு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவில்லை.


சம்பந்தனை விட தான் தமிழ் மக்களுக்கு நெருக்கமானவன் என்று காட்டும் தேவை விக்னேஸ்வரனுக்கு இருக்கின்றது.
கொழும்பு 7இல் வாழ்ந்து, றோயல் கல்லூரியில் கல்வி கற்று, தமது இரண்டு பிள்ளைகளை சிங்களவர்களுக்கு மணமுடித்து கொடுத்தவர் என்பதால், விக்னேஸ்வரனுக்கு தமிழ் மக்களை நெருங்க வேண்டும் என்ற மிகப் பெரிய தேவை உள்ளது.


உடலில் இல்லாத இனப்பற்றை காட்டவே உலகில் பழமையான மொழி தமிழ் எனக் கூறினார். இப்படி கூறினால், தூண்டி விட முடியும். அந்த கருத்து தமிழ் பத்திரிகைகளில் தலைப்பாக வெளிவரும்.
அப்போதுதான் விக்னேஸ்வரனுக்கு சம்பந்தனை விட பெரிய வீரனாக முடியும். விக்னேஸ்வரன் போன்றவர்கள் தற்போது ஏன் இப்படி நடந்துக்கொள்கின்றனர் என்பதை நாம் ஆராய வேண்டும்.


வடக்கில் உள்ள தமிழ் சமூகம் இனவாதத்தை நிராகரித்துள்ளது. 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 10 ஆசனங்களே கிடைத்துள்ளன.


இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற ஆசனம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.
அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பல அதிகாரத்திற்கு மத்தியில் அதாவுல்லா கிழக்கில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


படிப்படியாக தமிழ் – முஸ்லிம் சமூகம் அடிப்படைவாதம், இனவாதம் ஆகியவற்றை நிராகரித்து, ஒரே நாட்டில் இலங்கையர்களாக வழக்கூடிய எதிர்காலத்தை ஏற்படுத்தக் கூடிய நிலைமை உருவாகி வருவதை காட்டுகிறது.


அந்த முன்னேற்றத்திற்கு நாம் உயிர் கொடுக்க வேண்டும் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *