ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாக்குறுதியளித்தபடி, வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்காக பெருமளவு நிதி ஒதுக்கியுள்ளதாகவும், வடக்கு மக்கள் சார்பாக ஜனாதிபதிக்கு தான் நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமீளாய்வு கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (18) நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆளுநர்,
இவ்வாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நேற்று (முன்தினம் முன்தினம் 17) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. வடக்கு மாகாணத்துக்கு பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிகளவான நிதியும் வடக்கு மாகாண சபைக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி தனது உரையில், வடக்கு அதிகாரிகள் கோரிய நிதியையே வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எமக்கு ஒதுக்கப்பட்ட நிதியை நாம் முழுமையாகச் செலவு செய்யவேண்டும். அந்த நிதியை விரைவாக செலவு செய்து, மேலதிக நிதியையும் நாம் கோரவேண்டும். இது எமக்கு சவாலானதுதான். நாம் நிதியை திருப்பி அனுப்பாமல் இருக்கும்போதே நிதியை திருப்பியனுப்பியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பெருமளவு நிதி எமக்கு கிடைக்கப்பெறும் நிலையில் அதை உரிய முறையில் செலவு செய்யவேண்டும்.
எமது செயற்பாடுகளை ஊடகங்கள் உட்பட பல தரப்புக்களும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. எனவே வெளிப்படைத்தன்மையாக நிதியை விரைவாக செலவு செய்யவேண்டும்.
ஜனாதிபதியால் வீதி அபிவிருத்திக்காக விசேட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கு சமமாகப் பகிரத் தேவையில்லை. தேவைப்பாடுகள் அதிகமாகவுள்ள பகுதிகளுக்கு அதிகளவு நிதியை ஒதுக்குங்கள்.
இத் திட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டு தெரிவுகளை முன்னெடுக்காது, வன்னிப் பிராந்தியத்தின் ஒவ்வொரு இடத்துக்கும் நேரடியாக சென்று ஆராயுங்கள். அப்போதுதான் அப் மக்கள் அனுபவிக்கின்ற வலி உங்களுக்குத் தெரியும்.
இந்தத் திட்டங்களைச் செயற்படுத்தி முடிப்பது சவாலானதுதான். எனினும் எம்மால் முடியும் என நினைத்துக்கொண்டு இதைச் செய்யுங்கள். இரவு, பகல் பாராது இதைச் செய்யவேண்டும். நாம் முன்மாதிரியானவர்கள் என்பதை செயலில் காட்டுங்கள்.
இத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்போது ஊழல், இலஞ்சம் என்பன இருக்கக் கூடாது. அனைத்தும் வெளிப்படைத்தன்மையாக நடைபெறவேண்டும். இந்த அரசாங்கத்தின் கொள்கையும் அதுதான் என ஆளுநர் தெரிவித்தார்.