பிரதான செய்திகள்

றிஷாட்டின் கைதுக்கு எதிராக மு.கா. ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனை கைது செய்வதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் பாலாவியில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றது.


புத்தளம் பாலாவி இளைஞர் அமைப்பு உள்ளிட்ட பொதுஅமைப்புக்களின் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எம்.ஐ.இல்யாஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


இதன்போது 20ஆவது அரசியல் யாப்பு சீர்திருத்தம், தேர்தல் காலங்களில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை என்பனவற்றுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


ஜூம் ஆத் தொழுகையின் பின்னர் நபர்களுக்கிடையிலான தூரம், முகக் கவசம் உட்பட சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ‘ரிஷாத் பதியுதீன் பயங்கரவாதி அல்ல. அவர் சிறுபான்மை மக்களின் தலைவர்’, ‘சிறுபான்மை கட்சிகளை அழிக்காதே’, ‘சஜீதை ஆதரித்தது குற்றமா?’, ‘சர்வதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் 20 ஆவது சீர்திருதத்தம் எமக்கு வேண்டாம்’ உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களையும் எழுப்பினர்.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.


பாராளுமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை இல்லாமல் ஆக்கி சர்வதிகார போக்குடைய அரசாங்கத்தை கொண்டுவருவதற்கே 20ஆவது அரசியல் யாப்பு சீர் திருத்தத்தை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
நாட்டில் ஜனநாயகம், சட்டம், ஒழுங்கு உள்ளிட்டவை பாதுகாக்கப்பட வேண்டும். பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு, கணக்காய்வாளர் திணைக்களம் உள்ளிட்டவையும் சுயாதீனமாக இயங்க வேண்டும். ஒரு தனிமனிதனுடைய கரங்களில் அதிகாரங்களை சென்றடைவதற்கும், ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதற்கும் நாங்கள் ஒருபோதும் துணைபோக மாட்டோம்.


20ஆவது அரசியல் சீர்திருத்ததிற்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக அவரை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கலாகும் என்றார்.


இந்த ஆர்ப்பாட்டத்தின் போது புத்தளம் தலைமையக பொலிஸாரும், போக்குவரத்து பொலிஸாரும், பொலிஸ், இராணுவ மற்றும் விமானப்படை இரகசியப் பிரிவினரும் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒன்றுபட்ட ஒத்துழைப்புடன் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கும்

wpengine

ஹக்கீமுக்கு கேள்விகளின் கனதியும், மௌனத்தின் அர்த்தமும்

wpengine

தமிழர்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்களின் பலர் இஸ்லாமியர்கள்

wpengine