பிரதான செய்திகள்

ரவியின் கூற்று அரசாங்கத்தின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது !

இவ் அரசாங்கத்தின் உயரிய ஸ்தானத்தில் உள்ள, முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கண்டி கலவரத்தின் பின்னால், இவ்வரசின் முக்கிய புள்ளிகள் இருப்பதாக கூறியிருப்பதானது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நாமத்தை வைத்து, முஸ்லிம்களிடத்தில் அரசியல் பிழைப்பு நடாத்திக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளதோடு, முஸ்லிம்கள் உண்மைகளின் பக்கம் செல்ல காரணமாக அமைந்திருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

அண்மையில் கண்டியில் பாரிய கலவரம் ஒன்று இடம்பெற்று முற்றுப் பெற்றுள்ளது. வழமை போன்று, இதன் பின்னாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளார் என்ற கதைகள் எழாமல் இல்லை. இந்த பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பேச்சு அமைந்துள்ளது.இக் கலவரத்தின் பின்னால் அரசின் முக்கிய அரசியல் வாதிகள் உள்ளதான தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இது, அவர் அரசுக்கு வெளியில் இருந்து கூறவில்லை. அரசுக்குள் இருந்து கொண்டே இவ்வாறு கூறியுள்ளார். இவர், இன்று ஆட்சி நடாத்திக்கொண்டிருக்கும் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர்களில் ஒருவர்.இதன் பின்னரும், இதன் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே உள்ளார் என யாராவது கூறுவதாக இருந்தால், அவரை புத்தி சுயாதீனமற்றவராகவே கூற வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாயக்க ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய இடத்தில் உள்ள ஒருவர். அவர் இவ்வாறு கூறியிருப்பதானது, ஜனாதிபதி மைத்திரியை குறி வைத்த ஒரு பேச்சாகவே கருத வேண்டியுள்ளது.இங்கு தான் முஸ்லிம்கள் தங்களது சிந்தனைகளை ஆழமாக செலுத்த வேண்டியுள்ளது. இப்படித் தான் ஜனாதிபதி மைத்திரி மீதுள்ள குற்றத்தை நிரூபிக்க வேண்டிய தேவையில்லை. நாடே தடுமாறிய கலவரம் நடந்து முடிந்துள்ளது, அவரோ அது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார். இதுவே அவர்களைப் பற்றிய அறிய போதுமானதாகும். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட, இவர்களைப் பற்றிய உண்மைகளை அறியாது அதிகமான முஸ்லிம்கள், இவர்களுக்கே வாக்களித்துள்ளமை கவலைக்குரியதும், முஸ்லிம்களின் எதிர்காலத்துக்கு ஆபத்தனதுமானதாகும்.

இந்த அரசுக்குள்ள விசேடம் அவர்கள், தங்களை தாங்களே திருடன் (பிணை முறி விவகாரத்தில்) என அழைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் தங்களை தாங்களே கலகக் காரர்கள் எனவும் அழைத்துக்கொள்கிறார்கள். இதனைப் போன்ற ஒரு ஆட்சி இலங்கையை பிடித்துள்ள சாபமாக கருத வேண்டியுள்ளது. இவ் ஆட்சியின் பிரதான பங்காளிகளான முஸ்லிம்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை பிடித்துள்ள சாபமான, இவ்வாட்சியை துடைத்தெறிய முன் வர வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Related posts

அணுவில் 200பேரை பழிகொடுத்த வடகொரியா

wpengine

வட மாகாண பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு

wpengine

2019ஆம் ஆண்டுக்கான மீள்குடியேற்ற செயலணியின் வேலைத்திட்டம் வவுனியாவில்

wpengine