அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்;பின் நிர்வாகம் புதிய தடைகளின் ஒரு பகுதியாக பல நாடுகளின் பிரஜைகளிற்கு போக்குவரத்து தடைகளை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றது.

இந்த விடயம் குறித்து நன்கறிந்தவர்கள் மூலமும், இது தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டவர்கள் மூலமும் இது தெரியவந்துள்ளது.
41 நாடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ள டிரம்ப் நிர்வாகம் இந்த நாடுகளை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளது.
முதல் பிரிவில் ஆப்கானிஸ்தான் சிரியா ஈரான் வடகொரியா கியுபா உட்பட பத்துநாடுகள் காணப்படுகின்றன.
இந்த நாடுகள் முழுமையான போக்குவரத்து தடை ஆபத்தை எதிர்கொள்கின்றன.
இரண்டாவது பிரிவில் எரித்திரியா ஹெய்ட்டி லாவோஸ் மியன்மார் தென்சூடான் போன்ற நாடுகள் காணப்படுகின்றன.
இந்த நாடுகள் ஒரளவு விசா தடைகளை எதிர்கொள்ளக்கூடும் இதன் காரணமாக கல்விமாணவர் விசாக்களுக்கும் குடிவரவு விசாக்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
மூன்றாவது பிரிவில் பாக்கிஸ்தான் உட்பட 26 நாடுகள் காணப்படுகின்றன, இந்த நாடுகளின் அரசாங்கங்கள் தங்களின் தவறுகளை திருத்துவதற்கு 60 நாட்களிற்குள் நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் ஒரளவு தடைகளை எதிர்கொள்ளலாம்.
இந்த பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரியொருவர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ருபியோ உட்பட டிரம்ப் நிர்வாகத்தினர் இந்த தடைகளுக்கு இன்னமும் அங்கீகாரம் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்தில் ஏழு இஸ்லாமிய நாடுகளிற்கு எதிராக பயணத்தடையை கொண்டுவந்ததும் நீண்ட இழுபறியின் பின்னர் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை கண்டறிவதற்காக அமெரிக்காவிற்கு வரவிரும்பும் எந்தவொரு வெளிநாட்டவர் குறித்தும் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என ஜனவரி 20ம் திகதி டிரம்ப் நிர்வாக உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார்.
அமெரிக்காவிற்கு செல்பவர்களின் விபரங்களை ஆராய்வதில் எந்த நாடுகள் பலவீனமாக உள்ளன என கண்டறிந்து எந்த நாடுகளிற்கு முழுமையாக தடைகளை விதிக்கவேண்டும் போன்ற விபரங்களை தனது அமைச்சரவை உறுப்பினர்கள் மார்ச் 21ம்திகதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும் என டிரம்ப் கேட்டிருந்தார்.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg