பிரதான செய்திகள்

தொழுகையை நிறைவேற்ற வழங்கப்பட்ட விஷேட சலுகைக்கு வழிவிட வேண்டும் அமைச்சர் றிஷாட்

அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் தாபன விதிக் கோவையின் XIIஆம்
அத்தியாயத்தின் 12 பிரிவின் 12:1 உபபிரிவின் மீளமைக்கப்பட்ட சுற்றுநிருபத்தின் பிரகாரம், அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்கள் வெள்ளிக் கிழமைகளில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றவென வழங்கப்பட்ட விஷேட சலுகைக்கு வழிவிட வேண்டுமென அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த அமைச்சின் செயலாளரை வேண்டியுள்ளார்.

முஸ்லிம் அரச ஊழியர்கள் வெள்ளிகிழமைகளில், தமது மதக் கடமைகளை அனுஷ்டிக்கும் வகையில் 12.00 மணி தொடக்கம் 02.00 மணி வரை வழங்கப்பட்ட விஷேட விடுமுறைக்கு அனுமதியளிப்பதற்கு சில அதிகாரிகள் மறுப்புத் தெரிவிப்பதாகவும், எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விஷேட சலுகைக்கு இடமளித்து, மதக் கடமைகளை சீராக நிறைவேற்றுவதற்காக அதிகாரிகளுக்கு மீண்டும் சுற்றுநிருபம் தொடர்பில் அறிவுறுத்துமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அந்த அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் அரச அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை நேரத்தில் தமது கடமையை ஒழுங்காக நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும், அரச அதிகாரிகள் இதற்கு அனுமதி மறுப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் முஸ்லிம் அரச ஊழியர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்தே, அமைச்சர் இந்தக் கடிதத்தை அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளருக்கு எழுதியுள்ளார்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஜும்ஆத் தொழுகை மிகவும் கட்டாயக் கடமை எனவும் எனவே, அவர்களின் மதக் கடமைகளை அனுஷ்டிக்கும் வகையில் அரச நிருவாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு ஏற்கனவே வழங்கிய சலுகையை சில அதிகாரிகள் வழங்க மறுக்கின்றனர் எனவும், வேறு சில அதிகாரிகள் இந்த விடயத்தில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருவதால், முஸ்லிம் அரச ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தனியார் துறையினரும் முஸ்லிம்களின் சமய வழிப்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இந்த விசேட சலுகையை வழங்குவதை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் கோரியுள்ளார்.

Related posts

மே மாதம் சம்பளம் பெறாத 7500 அரச ஊழியர்

wpengine

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் மற்றும் விவசாய பீடங்களை ஆரம்பியுங்கள்- அஷ்ரப் தாஹிர் MP

Maash

எந்தவொரு மே தின கூட்டத்திலும் கலந்து கொள்வோம் அமைச்சர் ஹக்கீம்

wpengine