சிங்கள தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுபவர்களே இலங்கைத் தமிழரசுக் கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். கட்சியின் யாப்பின் அடிப்படையில் தான் நான் பதில் தலைவராக செயற்படுகிறேன். சுமந்திரன் பதில் செயலாளராக செயற்படுகிறார். தமிழர்களின் பாரம்பரியமான தமிழரசுக் கட்சியை ஒருபோதும் பிளவுப்படுத்த முடியாது.கட்சியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்படமாட்டார்கள் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய காரியாலயத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கைத் தமிழரசுக் கட்சி புதிய அரசியல் கட்சியாக உருவாக்கப்படுவதாகவும், கல்விமான்கள், இந்தியாவில் உள்ள தமிழ் தேசியவாதிகள், புலம்பெயர் தமிழர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து புதிய தமிழரசுக் கட்சியை உருவாக்குவதாகவும், தமிழரசுக் கட்சியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் இதற்கு ஆதரவளித்துள்ளதாகவும், கட்சியை பிளவுப்படுத்தும் வகையில் ஒருசில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இவ்விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் 6 உறுப்பினர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன். புதிய கட்சியை தோற்றுவிக்கும் சிந்தனை எவருக்கும் கிடையாது. பாரம்பரியமான இலங்கை தமிழரசுக் கட்சியை பிளவுப்படுத்துவதற்கு ஒரு தரப்பினர்கள் போலியான செய்திகளை வெளியிட்டுக்கொண்டுள்ளார்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கட்சிக்கு விசுவாசமாகவே உள்ளார்கள்.தமிழரசுக் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிப்பவர்கள் அனைவருக்கும் ‘தமிழரசு’ என்ற சொல் தேவைப்படுகிறது.தமிழ் மக்களுக்கு உள்ள பாரம்பரியமாக பலமிக்க அரசியல் கட்சியை பிளவுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றிப்பெறாது.
சிங்கள தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக செயற்படுபவர்களே இலங்கைத் தமிழரசுக் கட்சியை பிளவுப்படுத்த முயற்சிக்கிறார்கள். கட்சியின் யாப்பின் அடிப்படையில் தான் நான் பதில் தலைவராக செயற்படுகிறேன். சுமந்திரன் பதில் செயலாளராக செயற்படுகிறார். கட்சியின் யாப்புக்கு முரணாக நாமிருவரும் பதவிக்கு வரவில்லை.
மக்கள் மத்தியில் தவறான சித்தரிப்பை தோற்றுவிக்கவே ஒரு தரப்பினர் முயற்சிக்கிறார்கள். ஆகவே மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும்.தவறுகளை திருத்திக்கொண்டே செயற்படுகிறோம்.உள்ளுராட்சிமன்றத் தேர்தலை சிறந்த முறையில் நிர்வகிக்கும் தலைமைத்துவம் எம்மிடம் உள்ளதால் கட்சியை இலக்குப்படுத்தி போலியான பிரச்சாரங்களை ஒருதரப்பினர் முன்னெடுக்கிறார்கள்.
நடைமுறைக்கு சாதமான, பொறுப்பான சிந்தனைகளுடன் செயற்படுகிறோம்.
இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சிறந்த முறையில் வெற்றிப்பெறுவோம்.தற்போதைய தேர்தல் முறைமையின் பிரகாரம் எந்த அரசியல் கட்சியும் அருதிப்பெரும்பான்மை பலத்தை பெறாது.தமிழ் தேசிய கொள்கையுடன் உள்ள தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம்.அதில் பிரச்சினையொன்றுமில்லை.
மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து மாவட்ட இணைப்பு குழுவின் இணைத்தலைவராக மாகாண ஆளுநர் பதவி வகித்துள்ளார்.ஆனால் தற்போது இணைத்தலைவர் பதவி மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்படவில்லை.ஆகவே எந்தளவுக்கு அரசாங்கம் மாகாண சபை முறைமையை விரும்புகிறது என்பதை இதனூடாக விளங்கிக்கொள்ள முடிகிறது. இலங்கைக்கு வருகைத்தரவள்ள இந்திய பிரதமரிடம் மாகாண சபை முறைமை மற்றும் இதர விடயங்கள் குறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg