அரகலய’வின் போது தீக்கிரையாக்கப்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது, புதிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் காப்புறுதி தொகையும் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இவர்களே தமது வீடுகளுக்கு தீ வைத்துக் கொண்டார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது, ஏனெனில் வீட்டின் ஜன்னல் தீக்கிரையானதற்கும் ஒருசிலர் இழப்பீடு பெற்றுள்ளார்கள் .புதிய வீடுகள் வழங்கிய போது முதல் தொகை மாத்திரமே செலுத்தப்பட்டுள்ளது இதனால் அரசுக்கு 21 கோடியே 19 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் மற்றும் நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
2022 மே 09 சம்பவத்தின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. அப்போதைய சபாநாயகர் 76 அரசியல்வாதிகளுக்கு வீடுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கமைய கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு வீட்டுத்திட்டத்தில் 76 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட போது அதன் பெறுமதி தொகை மற்றும் வீடு நிர்மாணிக்கப்பட்டதன் பின்னரான பெறுமதி தொகையை கூட்டி அந்த தொகையை இரண்டால் பெருப்பித்து. குறித்த வீட்டின் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை ஒரே கட்டத்தில் செலுத்த முடியாது என்று 76 அரசியல்வாதிகளும் குறிப்பிட்டுள்ளன. வீட்டின் மொத்த தொகையின் 25 சதவீதத்தை முதற்கட்டமாக செலுத்தி மிகுதியை 15 ஆண்டுகளுக்கு தவணை அடிப்படையில் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.இதற்கமைவாக அவர்களுக்கு குறித்த வீட்டு தொகுதியில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக பெற்றுக்கொண்ட வீட்டுகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க 9.9 மில்லியன் ரூபா, மொஹமட் முஸம்பில் 3.3. மில்லியன் ரூபா, நிமல் பியதிஸ் 3.3 மில்லியன் ரூபாய், காமினி வலேகொட 3.3 மில்லியன் ரூபா, மஹிந்த யாப்பா அபேவர்தன 5.3 மில்லியன் ரூபா, காமினி லொகுகே 4 மில்லியன் ரூபாய், குமாரசிறி 3.3 மில்லியன் ரூபா,
அஜித் ராஜபக்ஷ 4.2 மில்லியன் ரூபா, சிந்தக மாயாதுன்ன 4.2 மில்லியன் ரூபா, ஜயதிலக 4.6 மில்லியன் ரூபா, திஸ்ஸ குட்டியராட்சி 4.1 மில்லியன் ரூபா, வீரசுமன வீரசிங்க 4.2 மில்லியன் ரூபா, அசங்க நவரத்ன 3.3 மில்லியன் ரூபா, பண்டார ஹேரத் 4.2 மில்லியன் ரூபா, எஸ். எம். சந்திரசேன 4.6 மில்லியன் ரூபா, அசோக பியந்த 4.1 மில்லியன் ரூபா, பிரேமலால் ஜயதிலக்க 4.1 மில்லியன் ரூபா என்ற அடிப்படையில் முதல் தொகையை செலுத்தியுள்ளனர். இதனால் அரசாங்கத்துக்கு 21 கோடியே 19 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
அரகலயவின் போது தீக்கிரையாக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது, புதிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் காப்புறுதி தொகையும் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இவர்களே தமது வீடுகளுக்கு தீ வைத்துக் கொண்டார்களா என்ற சந்தேகம் காணப்படுகிறது, ஏனெனில் வீட்டின் ஜன்னல் தீக்கிரையானதற்கும் ஒருசிலர் இழப்பீடு பெற்றுள்ளார்கள் என்றார்.