(எம்.பர்விஸ்)
வடமாகாணத்திலிருந்து வெளியேறி சுமார் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக அகதி முகாமில் வாழ்ந்த பின்னர் மீண்டும் தமது சொந்தப்பிரதேசங்களுக்குச் சென்று மீள்குடியேறியுள்ள அகதி முஸ்லிம்கள் குடி நீரின்றி அவதியுறுகின்றனர்.

வெயிலின் அகோரம் ஒரு புறம் இருக்க குடிப்பதற்கோ குளிப்பதற்கோ நீரின்றி பரிதவிக்கும் இந்தப் பிரதேச மக்கள் குறிப்பாக கரடிக்குளி, மறிச்சுக்கட்டி, பாலைக்குழி போன்ற இடங்களில் வாழும் இவர்கள் தமக்கு நீர் வசதி பெற்றுத்தருமாறு நீர் வளங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இற்றை வரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லையென வேதனைப்படுகின்றனர்.

தேர்தல் முடிந்த பிறகு அந்தப் பிரதேசத்திற்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், நீரின்றி தாம் படுகின்ற வேதனைகளை எடுத்துரைத்த போதும் இற்றைவரை எதுவும் நடக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதே வேளை இந்த மக்கள் படுகின்ற கஷ்டங்களை உணர்ந்த வன்னி மாவட்டப் பிரிதிநிதியும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இது தொடர்பில் பிரஸ்தாபித்தும் இருக்கிறார் என தெரிவிக்கப்படுகின்றது.

எதுவுமே நடைபெறாத நிலையில் அமைச்சர் பதியுதீன் மன்னார் மாவட்ட மக்கள் எதிர் நோக்கும் குடி நீர் கஷ்டங்களை போக்கும் வகையிலும் மீள்குடியேறியுள்ள அகதி மக்களின் அவசர குடிநீர்ப்பிரச்சினையை தீர்க்கும் வகையிலும் அமைச்சரவைக்கு பத்திரமொன்றை சமர்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தற்காலிகமாக அந்தப்பிரதேச மக்களுக்கு பிரதேச சபை ஊடாக குடி நீரை வழங்கவும், நிரந்தர தீர்வுத்திட்டத்திற்குத் தேவையான ரூபா 39000 மில்லியனை ஒதுக்கித் தருமாறும் ஜனாதிபதி, பிரதமருக்கு எழுத்து மூலக்கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள அமைச்சர் அதன் பிரதிகளில் ஒன்றை நீர்வளங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஹக்கீமுக்கு அனுப்பி வைத்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *