அண்மையில் நடைபெற்ற பிரதமர் அலுவலக வாகன ஏல விற்பனையில் பாரிய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பிரபல மருத்துவ நிபுணர் ஒருவர் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரபல மருத்துவ நிபுணரான காமினி ரணசிங்க என்பவர் இது தொடர்பில் கடந்த 21ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த மே மாதம் நடைபெற்ற வாகன ஏல விற்பனையின் போது 2014ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட போர்ட் எவரஸ்ட் கார் (CAB 3453) ஒன்றின் விலை 2.5 மில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதே போன்று கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற ஏல விற்பனையின் போது அதே ரக வாகனம்(CAB 3441) ஒன்று 6.6 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டு ஏல விற்பனை செய்யப்பட்டது.
எனினும், அதே ரக வாகனம் (CAN 3452) ஒன்றை நான் 09 மில்லியன் ரூபாவுக்கு ஏல விற்பனையில் எடுக்க டெண்டர் சமர்ப்பித்தபோது வாகனத்தின் பெறுமதி அதனை விட அதிகம் என்று எனது டெண்டர் நிராகரிக்கப்பட்டது.
சுமார் இரண்டு மாத காலத்தினுள் ஒரே ரக வாகனமொன்றின் விலை 6.5 மில்லியன்களினால் எவ்வாறு அதிகரித்தது என்பதை நான் அறியேன்.
ஆனால், இதில் பாரிய முறைகேடு நடைபெற்றுள்ளதை மட்டும் தெளிவாக அறிவேன். ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் பொதுமக்கள் உங்களை ஆட்சிக்குக் கொண்டுவந்துள்ளனர்.
அவ்வாறான நிலையில், இவ்வாறான மோசடிகள் நடைபெறுவதைக் குறித்து எனது பலத்த அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் மருத்துவ நிபுணர் காமினி ரணசிங்க தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
