துறைமுக அதிகார சபையால் அபகரிக்கப்பட்டுள்ள தமிழர் பிரதேச காணிகளை மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem) கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில், துறைமுக அதிகார சபையால் அபகரிக்கப்பட்டுள்ள திருகோணமலை (Trincomalee), கருமலையூற்று, நாச்சிக்குடா, சின்னமுள்ளச்சேனை மற்றும் முத்து நகர் மக்களுக்கான காணியையே இவ்வாறு பெற்று தருமாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி ஒன்றை மேற்கோள்காட்டி திருகோணமலை மாவட்டத்தில் முத்து நகரில் துறைமுக அதிகார சபை உத்தியோகத்தர்கள் சென்று காணியை சுவீகரிப்பதற்கு நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சித்த போது அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அந்தச்சந்தர்ப்பில் களத்திற்குச்சென்ற அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன (Roshan Akmeemana) தலையிட்டு அதனைத்தீர்த்து தருவதாக வாக்குறுதியளித்துள்ளார்.
துறைமுக அதிகார சபையினால் 1984 இல் இக்காணியைச் சுவீகரிக்கின்ற போது ஒரு சில விவசாயிகள் வசித்துள்ளார்.
அதேநேரம், சின்ன முள்ளசேனை, குடாக்கரை மற்றும் முத்து நகர் போன்ற பிரதேச காணிகளை வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்க முற்பட்ட போது தான் அதற்கெதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் துறைமுக அமைச்சின் செயலாளர் ருவன் சந்திரவுடன் கலந்துரையாடி கோரிக்கையையும் முன்வைத்திருந்தோம்.
இப்பிரதேசத்தில் வாழும் மக்களால் மலசலகூடத்தைக்கூட அமைக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதுடன், அதற்கு துறைமுக அதிகார சபை அதிகாரிகள் இடையூறு செய்கின்றார்கள்.
மிக் நீண்டகாலமாக இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்வதுடன், சுற்றுச்சூழலையும் தமது பயிர் நிலங்களின் உரிமையை இழந்திருக்கிறார்கள்.
வர்த்தமானியில் வெளியிடப்பட்டாலும் கூட, அது அரசுசார் நாடாளுமன்ற உறுப்பினரும் வாக்குறுதியளித்திருப்பதால் மனிதாபிமான அடிப்படையில் அரசு இதனை மீள்பரிசீலனை செய்து துறைமுக அதிகார சபையின் பிடியிலிருந்து இக்காணியை மீட்டு அம்மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg