வேலணை செட்டிபுலம் பகுதியில் நேற்று (16) மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலணை செட்டிபுலம் முதலாம் வட்டாரத்தில் வசித்த 9 வயதுடைய சந்திரகாசன் கனிஸ்டன் என்ற சிறுவனே குறித்த அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து உறவினர்கள் தெரிவிக்கையில்,
சம்பவம் இடம்பெற்றபோது எவரும் வீட்டில் இல்லை. நேற்று மாலை குறித்த சிறுவனின் தாயார் அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.
இதன்போது தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் இணைப்பை ஏற்படுத்த முற்பட்டவேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நம்பப்படுகின்றது.
வீட்டுக்கு உறவினர்கள் வந்தபோது சிறுவன் மயங்கிய நிலையில் சிகிச்சைக்காக வேலணை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆனாலும் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே நேரம் சிறுவனின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுபப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.