USAID நிதியுதவியை முடக்கும் அமெரிக்க (US) அரசாங்கத்தின் தீர்மானம், இலங்கையின் அரச சார்பற்ற நிறுவனத் துறையை (NGO) நெருக்கடிக்கு தள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) இத்தீர்மானத்தினால், அரசு சாரா நிறுவன துறையில் 1,000க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற நோக்கங்களில் கவனம் செலுத்தும் பல நிறுவனங்கள் நிதியுதவி நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து தங்கள் திட்டங்களைத் தக்கவைக்க போராடுகின்றன.
மனித உரிமைகள், நல்லாட்சி மற்றும் பெண்கள் மற்றும் பாலின உரிமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கை அரச சார்பற்ற நிறுவனங்கள் USAID (United States Agency for International Development) நிதியுதவியிலேயே இயங்குகின்றன.
டொனால்ட் ட்ரம்பின்”அமெரிக்கா முதல்” கொள்கை, சர்வதேச வளர்ச்சி திட்டங்களை விட உள்நாட்டு செலவினங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை குறிக்கின்றது. எனவே, இந்த நடவடிக்கை, வெளிநாட்டு நிதியுதவிகளை குறைப்பதற்கு வழிவகுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்கள், “அமெரிக்காவின் இந்த முடிவு எங்களை சிக்கலுக்குள் தள்ளியுள்ளது. நாங்கள் ஊழியர்களை வெளியேற்றியுள்ளோம், மேலும் இந்த நிதி தடை தொடர்ந்தால், பல திட்டங்கள் சரிந்துவிடும்,” என்று கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.