பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதினைப் பெற்ற பெண் மன்னாரில் கௌரவிப்பு


அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருதினைப் பெற்ற (International Women of Courage) சட்டத்தரணி திருமதி ரனிதா ஞானராஜாவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று மன்னாரில் நடைபெற்றது.

சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி ரனிதா ஞானராஜாவை கௌரவிக்கும் இந்த நிகழ்வு, அவர் பிறந்த இடமான மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு உள்ளிட்ட பொது அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

சர்வ மதத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அண்மையில் அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இலங்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு அளித்த சிறப்பான பங்களிப்பை அங்கீகரித்து, துணிச்சலுக்கான சர்வதேச பெண்கள் விருது சட்டத்தரணி ரனிதா ஞானராஜாவிற்கு வழங்கப்பட்டது.

ரனிதா ஞானராஜா, அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிப்புகளை எதிர்நோக்கும் சமூகங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடியவர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நீண்ட காலமாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சட்ட உதவியை ரனிதா வழங்கியுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட முறையில் போரினால் பாதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருடனும் பணியாற்றிய தனது விரிவான அனுபவத்தின் அடிப்படையில், இலங்கையின் மிகவும் நலிவுற்ற மக்களுக்கு நீதியையும் பொறுப்புக்கூறலையும் பெற்றுக்கொடுப்பதில் ரனிதா அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்.

உலகெங்கும் உள்ள பெண்களின் தைரியத்தையும் தலைமைத்துவத்தையும் அமைதிக்கான வாதிடலையும் அங்கீகரித்து, நீதி, மனித உரிமைகள், பால்நிலை சமத்துவம், பெண்களை வலுவூட்டல் போன்றவற்றுக்காக தனிப்பட்ட ரீதியில் அபாயத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றியமைக்காக, அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக International Women of Courage விருது வழங்கப்பட்டு வருகிறது.

இம்முறை 15 ஆவது ஆண்டாக இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 75 நாடுகளை சேர்ந்த 155 பெண்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மதக்கல்வியே ஒருவருடைய வாழ்க்கையை செப்பனிடும் – பாராளமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான்

wpengine

மூவினங்களின் இன நல்லுறவுக்காக உழைத்தவர் அஸ்வர் அமைச்சர் றிஷாட்டின் அனுதாபம்

wpengine

ரவி கருணாநாயக்க பொது பல சேனாவுக்கு பணம் வழங்கியது ஏன்?

wpengine