Breaking
Sun. Apr 28th, 2024

பாராளுமன்ற மற்றும் வெகுசன தொடர்பு அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரனவிதாரன, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருடன் தென்னிலங்கையின் அனைத்து ஊடக அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் அதிகமான பிரதிநிதிகள் வடக்கு மாகாணத்திற்கான 3 நாள் விஜயத்தினை மேற்கொண்டு நேற்று பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்கள்.

அவர்களது ஆரம்ப நிகழ்வாக வணக்கஸ்தலங்களுக்கான விஜயங்கள் அமைந்திருந்தன அந்தவகையில் கயந்த தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி, பெரிய மொஹிதீன் ஜும்ஆ மஸ்ஜிதிற்கும் விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்கள்.

அமைச்சர் தலைமையிலான தூதுக்குழுவினரை வடக்கு மாகாணசபை உறுப்பினரும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதியுமாகிய அஸ்மின் அய்யூப் அவர்களுடைய தலைமையில் யாழ் முஸ்லிம்கள் வரவேற்றனர்.SAM_4777

வரவேற்புரையினை பள்ளிவாயல் நிர்வாகியும், முன்னைய நாள் யாழ் மாநகரசபை உறுப்பினருமாகிய ஜனாப்.சரபுல் அனாம் வழங்கினார்கள், அடுத்து யாழ் முஸ்லிம்களின் தற்போதைய நிலை மற்றும் ஊடக அமைச்சர் அவர்களிடம் யாழ் முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகள் என்பவற்றை யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் செயலாளர் ஜனாப் சுவர்கஹான் முன்வைத்தார்கள்.

1990களிலே வடக்கு முஸ்லிம்களுக்கு நிகழ்ந்த பலவந்த இனச்சுத்திகரிப்பு, மற்றும் இடம்பெயர் வாழ்வின் துன்பதுயரங்கள், தற்போதைய மீள்குடியேற்ற சூழ்நிலையில் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவிடயங்களை மிகவும் சுருக்கமாக முன்வைத்து ஊடக அமைச்சரின் யாழ் முஸ்லிம்களின் கோரிக்கைகள் என்ற விடயத்தை முன்வைத்தார்கள்

ஊடக அமைச்சு என்ற ரீதியில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு, வெளியேற்றம், அவர்களது இடம்பெயர் வாழ்வு நிலைகள், மீள்குடியேற்றம் அதிலே காணப்படுகின்ற சவால்கள், பிரச்சினைகளை உத்தியோகபூர்வ விவரண ஆவணமாக வெளிக்கொண்டுவருவதற்கும் “இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட வடக்கு முஸ்லிம்கள்” என்னும் ஆவணப்படமொன்றினை உருவாக்குவதற்கு ஆவண செய்தல்

வடக்கு முஸ்லிம்களின் இளந்தலைமுறையினர்க்கான ஊடகப் பயிற்சிநெறியொன்றினையும், ஊடகத்துறைரீதியான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல்

ஊடக அமைச்சர் என்ற ரீதியில் குறிப்பாக சிங்களமொழி மூல, ஆங்கில மொழி மூல ஊடகங்களுக்கு வடக்கு முஸ்லிம்களின் நிலைகளை வெளியுலகிற்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தல்களை வழங்குதல்

போன்ற முக்கிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தனர், கோரிக்கைகள் உள்ளடங்கிய மஹஜரொன்றினை யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவர் ஜனாப்.ஜமால் மொஹிதீன், மற்றும் உபதலைவர் ஜனாப் எம்.எல்.லாபிர் ஆகியோர் அமைச்சரிடம் கையளித்தனர்.

யாழ்,கிளிநொச்சி ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அப்துல் அஸீஸ் அவர்கள் அமைச்சர் அவர்களின் விஜயத்திற்கு அல்லாஹ்வின் அருள்வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனையொன்றினை வழங்கினார்கள்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கௌரவ.கயந்த கருணாதிலக (பா.உ) அவர்கள் மக்களுக்கு ஒரு சில கருத்துக்களை வழங்கினார்.

நல்லாட்சி அரசில் ஊடகத்துறை அமைச்சர் என்றவகையில் எவ்விதமான பாகுபாடுமின்றியும் கூடுதல் குறைத்தல் இன்றியும் நாம் மக்களுக்கு தகவல்களை வழங்குகின்றோம், இது எங்களது பொறுப்பாக இருக்கின்றது, இன்று வடக்கு நோக்கி நாங்கள் வந்திருப்பது வடக்கின் ஊடகத்துறை பற்றி அறிந்துகொள்ளவும், இங்கிருக்கின்ற மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொள்ளவும், வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்தவுமாகும், எமது பயணத்தின் எல்லா ஸ்தானங்களிலும் ஊடகவியலாளர்கள் எம்மை வரவேற்று வாழ்த்துக்கூறி வழி அனுப்பி வைத்திருக்கின்றார்கள், இது எமக்கு மகிழ்வைத் தருகின்றது.

யாழ்ப்பாண முஸ்லிம்களை சந்திக்கக் கிடைத்தமை எனக்கு விஷேட மகிழ்ச்சியைத் தருகின்றது, நான் காலி பிரதேசத்தைச் சேர்ந்தவன், அங்கிருக்கின்ற முஸ்லிம்கள் எம்மோடு மிகவும் நெருக்கமாகவே இருக்கின்றார்கள், அதே போன்று எங்களுடைய பிரதி அமைச்சர் இரத்தின புரியைச் சேர்ந்தவர் அவருக்கும் அங்கிருக்கும் முஸ்லிம்கள் மிகவுமே நெருக்கமானவர்கள், நீங்கள் எங்களுடைய மக்கள் உங்களுடைய கோரிக்கைகளை நான் ஏற்றுக்கொள்கின்றேன், முதலாவதாக ஊடகப் பயிற்சியொன்றினை நான் உடனடியாக இந்தப் பிரதேச இளைஞர்களுக்கு வழங்குமாறு எனது அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குகின்றேன், உங்களுடைய மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அவர்களூடாக அதற்கான ஏற்பாடுகளை செய்யமுடியும். ஏனைய கோரிக்கைளையும் நான் சதாகமாகப் பரிசீலிக்கின்றேன்.

உங்களுடைய அன்புக்கும், வரவேற்புக்கும், இவ்வாறான ஒரு சிறப்பான ஆசீர்வாத நிகழ்விற்கும் நன்றி கூறி விடைபெறுகின்றேன். என்று தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *