செய்திகள்பிரதான செய்திகள்

16 வருடங்களுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” ஜனாதிபதியின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

நாட்டு மக்கள் புனித தந்ததாதுவை தரிசித்து வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் 16 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமானது.

அதன் ஆரம்ப நிகழ்வின்போது முதலில்  ஜனாதிபதி “தலதா” புனித தந்ததாதுவை தரிசித்து மலர் வைத்து வழிபட்டார்.  

அதன் பின்னர், பக்தர்களும் புனித தந்ததாதுவை தரிசிக்க வாய்ப்பளிக்கும் வகையில் “ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்பமானது. 

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி  தேரர்களின் அனுசரணையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று முதல் ஏப்ரல் 27ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.

ஆரம்ப நாளான இன்று (18) புனித தந்ததாதுவை வழிபட நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்தனர். 

பக்தர்கள் “தலதா” புனித தந்ததாதுவை இன்று மாலை 5 மணி வரையிலும், நாளை (19) முதல் தினசரி பிற்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரையிலும்  வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் ஏனைய அமைச்சர்கள், வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் உட்பட இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related posts

மாவட்ட ரீதியாக உடல்களை அடக்கம் செய்ய இடங்களை தெரிவு செய்யுங்கள்

wpengine

வவுனியா சமுர்த்தி பாதுகாப்பு மன்றத்தினால்! போதை விழிப்புணர்வு

wpengine

மயானத்தை அகற்றுமாறு மக்கள் போராட்டம்! பொலிஸ் குவிப்பு

wpengine