நேற்றுமுன்தினம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் ஒருதொகை உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்குரிய வாக்காளர் அட்டைகள் இருப்பதாக தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தெரியவருகையில், வியாபார நிலையம் ஒன்றில் ஒருதொகை வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளும்கட்சி வேட்பாளர் ஒருவரின் சகோதரனும், தபால் ஊழியர் ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து ஒருதொகை வாக்காளர் அட்டையினை மீட்டுள்ளனர்.
இதேவேளை அதனை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக வியாபார நிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அந்தப்பகுதிக்குரிய தபால் ஊழியரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட வியாபாரநிலைய உரிமையாளரின் சகோதரன் தேசியமக்கள் சக்தியின் வவுனியா மாநகரசபைக்காக போட்டியிடும் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.