(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் வளமாக வாழ நலமாக வாழ்வோம் எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று கடந்த 10 ஞாயிற்றுக்கிழமை புதிய காத்தான்குடி-02 கப்பல் ஆலிம் வீதயிலுள்ள ஜாமிஉல் அதர் ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.
தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் மார்க்கப் பிரச்சாரகர் அஷ்செய்க் பீ.எம்.அஸ்பர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வுக் கருத்தரங்கில் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் தற்காலத்தில் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிமுறைகள் எனும் தலைப்பிலும்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி அதிகாரி டாக்டர் விவேக் இரத்த தானத்தின் முக்கியத்துவம் எனும் தலைப்பிலும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இக் கருத்தரங்கில் அதிகளவான பெண்கள் கலந்து கொண்டனர்.
குறித்த பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பினால் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள இரத்ததான முகாமை முன்னிட்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.