Breaking
Wed. Apr 24th, 2024

வடக்கு கடல் பிரதேசத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (16) தொடக்கம் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிக்குமாறு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட பணிப்பாளர்களுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுறுத்தியுள்ளார்.


எனினும், குறித்த அனுமதியானது ஸ்கின் டைவிங் எனப்படும் சாதாரண சுழியோடி முறையின் ஊடாக மாத்திரமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், ஸ்கியூபா எனப்படும் சிலிண்டர் பயன்படுத்தி கடலட்டை பிடிக்க அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


நாடாளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும், கொரோனாப் பரவலைப் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் ஒன்றாக வடக்கு கடலில் கடலடை பிடிப்பது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பரிந்துரையின் அடிப்படையில் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது.


எனினும், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கு முழு நாட்டையும் முடக்காமால் அடையாளப்படுத்தப்படுகின்ற பிரதேசங்களை மாத்திரம் தனிமைப்படுத்துவன் ஊடாக கட்டுப்படுத்துவது என்ற அரசின் தற்போதைய தீர்மானத்திற்கு அமைவாக, கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை நிபந்தனையுடன் வழங்குமாறு கடற்றொழில் அமைச்சர், மாவட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


அத்துடன், வடக்கு கடல் பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் பயன்படுத்தப்படுவதாகத் தனக்கு தகவல்கள் கிடைப்பதாகத் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், தடை செய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


அதேபோன்று, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகள் தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான அமைச்சு மட்டக் கலந்துரையாடல் விரைவில் நடைபெறவுள்ளதால் எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் தொடர்பான பதிவுளைத் தனக்குச் சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *