வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்கான தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், இன்று (27), சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவுடன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், சங்கு கூட்டணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரி உபதவிசாளராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, தெரிவுகளை ரகசியமாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில், தேசிய மக்கள் சக்தி, இலங்கை தொழிலாளர் கட்சி மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்திருந்தனர்.
சபையில் மீதம் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில், அவர்களில் 17 பேர் தெரிவுகளை பகிரங்கமாக நடத்துமாறு வாக்களித்திருந்தனர். பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடத்தப்பட்டது. .