மன்னாரில் கரையோர பகுதிகளில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மன்னார் தீவுப் பகுதியில் கனிய மணல் அகழ்வு முன்னெடுப்பது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை சௌத்பார் மன்னார் பகுதியில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் ரமேஷ் கண்ணா தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் கனிய மணல் அகழ்வை முன்னெடுக்கும் நிறுவனத்தின் பிரதிநிதிகள், அப்பிரதேசத்தில் உள்ள மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடல் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பாக தமது விசனத்தை தெரிவித்ததோடு, பிரதேச மக்களின் முழுமையான சம்மதம் இன்றி அந்த பிரதேசத்தில் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்க தாம் அனுமதிக்க மாட்டோம் என இந்த கூட்டத்தில் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, கூட்டத்தில் கலந்துகொண்ட பலர் கணிய மணல் அகழ்வுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது.
இக்கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதேச மக்கள் தெரிவிக்கையில்,
கனிய மணல் அகழ்வுக்கு மக்களின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த கலந்துரையாடல் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது.
மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகவும் மக்களின் கஷ்டங்களை போக்குவதாகவும் அவர்கள் கூறி மக்களை மயக்கி அனுமதி பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கின்றனர். கனிய மணல் அகழ்வுப் பணிகள் செயற்படுத்தப்பட்டால் இக்கிராமம் முழுமையாக பாதிக்கப்படும்.
எமது கிராமத்தின் கரையோர பகுதியில் கனிய மணல் அகழ்வுக்காக எங்களிடம் அனுமதி கேட்கின்றனர்.
அனுமதி வழங்கினால் மக்கள் இங்கே வாழ முடியாத நிலை ஏற்படும். இதனால் நாங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால்தான் இப்பகுதியில் கணிய மணல் அகழ்வுக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.