நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொழில் புரியும் அரச தாதி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை 10:00 மணி முதல் பகல் 01:00 மணி வரை மூன்று மணித்தியாலயங்கள் சேவைகளை இடைநிறுத்தி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
நாடளாவிய ரீதியில் தாதியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தொழில் புரியும் தாதியர்கள் வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகே நின்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கு எதிரான வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி, கோஷங்கள் எழுப்பி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி பணிப்பகிஸ்கரிப்பும், கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இதில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவுகளை குறைத்தல் மற்றும் பதவி உயர்வு முறையைக் குறைத்தல் ஆகிய பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதேவேளை, எமது கோரிக்கைகளுக்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிடின், தொடர் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தாதிய உத்தியோகத்தர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.