தேசிய மக்கள் சக்தி கட்சிக்குள் தற்கொலைப் போராளிகள் ஊடுருவியுள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலைப் போராளிகளைக் கொண்ட கடும்போக்குவாத தரப்புக்கள் தற்போதைய அரசாங்கத்துடனும் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய கடும்போக்குவாத அமைப்பான இந்த அமைப்பிடமிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கடும்போக்குவாத இயக்கம் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமையை நிரூபணம் செய்யும் துண்டுப் பிரசுரம் மற்றும் புகைப்படம் ஒன்றையும் கலகொடத்தே ஞானசார தேரர் காண்பித்துள்ளார்.
மக்களை இலக்கு வைத்து தாக்குதல்
கடும்போக்குவாத தலைவர்கள் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் இணைந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் புலனாய்வுப் பிரிவு தொடர்பில் பாரியளவிலான பலவீனமான நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலதா மாளிகையில் புனித பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ள நிலையில் பௌத்த மக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நாட்டில் இனவாத மற்றும் மதவாதங்களுக்கு இடமளிக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.