தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட விவகாரங்களில் கடந்த கால அரசுகளைப் போன்று அனுர அரசும் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டு வருகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ். வட மராட்சிக்கு நேற்று (04) விஜயம் மேற்கொண்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்குவது, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு உள்ளிட்ட தமிழர் விவகாரங்களில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் அனுர அரசும் ஏமாற்றும் விதத்திலேயே செயற்பட்டு வருகிறது.
ஜெனீவா விவகாரம் மற்றும் வரவு – செலவு திட்டம் ஆகியவற்றில் இந்த விடயங்கள் குறித்து அதிகமாக பேசுகின்ற அளவுக்கு நடைமுறையில் செயற்படுத்துவதில் இந்த அரசு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோரது அண்மைக்கால பேச்சுகள் இதனையே உறுதிப்படுத்துகின்றன.
அரசியல் தேவைகளுக்காக மீனவர் பிரச்சினையை கையிலெடுக்காது கடல் வளத்தையும் மீனவர்களது வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு இரு நாட்டு அரசுகளும் சாத்தியமான வழிமுறைகளில் தீர்வுகான முன்வரவேண்டும் என்றார்.