Breaking
Thu. Apr 25th, 2024

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவானது எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதை நிறைவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. 

எனவே குறித்த திகதிக்கு முன்னதாக  முறைப்பாடுகள், மனுக்கள் மற்றும் தகவல்களை வழங்குமாறு ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாச பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த ஆணைக்குழுவானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது.

குறித்த ஆணைக்குழுவானது 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் ஊழல் மோசடிகள் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதோடு அது குறித்த அறிக்கையானது எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும் இவ்வறிக்கையானது ஆரம்ப விசாரணை அறிக்கையாக அமையும் என தெரிவிக்கப்பட்தோடு  குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களென நிரூபணமாகும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பிரதிப் பொலிஸ் மா அதிபர், பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட தனியான விசாரணைப் பிரிவொன்று நிறுவப்படுமெனவும் கூறப்பட்டது.

இவ்வாறான நிலையில் முன்னாள் ஜனாதிபதி, பொருளாதார அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் ஜனாதிபதியின் பாரியார், புதல்வர், கடந்த அரசாங்கத்தில் பதவி விகித்த முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் பல பதிவு செய்யப்பட்டு 50இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் 2010ஆம் ஆண்டுக்கு முன்னைய காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் மோசடிகள் தொடர்பிலும் விசாரணை நடத்த சந்தர்ப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆணைக்குழுவின் அதிகாரங்களில் திருத்தம் செய்யப்படவேண்டுமென்ற கோரிக்கைகளும் மேலெழுந்திருந்தன.

இந்நிலையில் கடந்த மாதம் ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா தமது பதவியை இராஜினாமச் செய்திருந்தார். அதற்கு பதிலாக  எச்.டப்ளியூ. குணதாச நியமிக்கப்பட்டிருந்தார். அந்நிலையில் கடந்த ஆட்சியாளர்களினால் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் குறித்த ஆணைக்குழு தனது செயற்பாடுகளை தற்போதும் முன்னெடுத்து வரும் நிலையிலேயே மேற்கண்ட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *