சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற 3 மீன்பிடி இயந்திர படகுகளில் ஒரு படகு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக இந்த மீன்பிடி படகு காணாமல் போயுள்ளதுடன், அதில் பயணித்த இரு மீனவர்களும் காணாமல் போயுள்ளனர் எனவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம் வெல்ல கொலனி பகுதியை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளில் பயணித்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.
குறித்த இரண்டு படகுகளில் ஒன்று பாறையில் மோதி சேதமடைந்ததுடன், அதில் இருந்த மீனவர்கள் நேற்று இரவு நீந்தி கரை சேர்ந்துள்ள அதேநேரம், அவர்கள் சென்ற மீன்பிடி படகு கருகுபனே மீன்பிடி கிராமத்தில் கரையொதுங்கியுள்ளது.
மற்றைய படகில் இருந்த மீனவர்கள் புயல் காரணமாக படகு கவிழ்ந்ததை அடுத்து முத்துப்பந்திய மீன்பிடி கிராமத்திற்கு சென்றுள்ளதுடன், பின்னர் அங்கிருந்த மீனவர்களின் உதவியுடன் சிலாபம் பகுதிக்கு சென்றுள்ளனர்.
இந்த 3 மீன்பிடி படகும் சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்கு சென்றுள்ள நிலையில், காணாமல் போன படகில் இருந்த 2 மீனவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்வாறு காணாமல் போன மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த இரண்டு மீனவர்களையும் தேடி நேற்று (19) இரவு இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கடற்பிரதேசங்களில் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் மீன்பிடி படகு இன்று (20) காலை சிலாபம் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாகவும், எனினும் இரண்டு மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணாமல் போன இரண்டு மீனவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பலத்த காற்று மற்றும் புயல் என்பனவற்றில் சிக்கி நிலையில், சேதமடைந்த மீன்பிடி படகுகளையும் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் பார்வையிட்டதுடன், நீந்தி கரைசேர்ந்த மீனவர்களையும் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்துகொண்டார்.
