Breaking
Sat. Apr 20th, 2024

இணைந்து தேசிய அரசு அமைக்கும் நோக்கம் எமக்கு இல்லை. பொதுத்தேர்தலில் அவர்களின் கொட்டத்தை அடக்குவதே எமது குறிக்கோள் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன கூறியுள்ளார்.


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது,


ஐக்கிய தேசியக் கட்சி என்பது ரணிலோ அல்லது சஜித்தோ அல்லது கபீர் ஹாசீமோ அல்ல. இது கிராமபுறங்களை சேர்ந்த ஆதரவாளர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் கட்சியாகும்.
எனவே, தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்திலிருந்து விலகிச் சென்றாலும் ஐ.தே.க. முன்னோக்கிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.


எமது கட்சியிலிருந்து விலகிச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் எமது கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று அவர்களுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


இதேபோன்று சுயாதீனமாகவும், வேறு கட்சிகளுடனும் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானம் எடுத்துள்ள எமது கட்சியின் உறுப்புரிமை பெற்றிருந்தவர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்காக மத்திய செயற்குழு தீர்மானம் எடுத்துள்ளது.


அதற்கு நாங்கள் இணக்கம் தெரிவித்தை அடுத்து அவர்களுக்குக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 99 பேர் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.


இதனால் கட்சியில் காணப்பட்ட இடைவெளியை நிரப்புவதற்காக மத்திய செயற்குழு புதிய நியமனங்களையும் வழங்கியுள்ளது.
அதற்கமைய கட்சியின் பொதுச் செயலாளராகத் தொடர்ந்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.


உப தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் , தேசிய அமைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தற்போது எமது கட்சியின் தலைவர் மற்றும் பிரதித் தலைவருக்கிடையில் இடைவெளி இருக்கின்றது. அது தொடர்பில் எதிர்வரும் தினங்களில் தீர்மானம் எடுப்போம். இதேவேளை கட்சியின் பொருளாளராக சட்டத்தரணி பிஸ்மா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
ராஜபக்சக்களுடன் இணைந்து தேசிய அரசு அமைக்கும் நோக்கம் எமக்கு இல்லை. பொதுத்தேர்தலில் அவர்களின் கொட்டத்தை அடக்குவதே எமது குறிக்கோள். இந்தக் குறிக்கோளை நாம் நிறைவேற்றியே தீருவோம். அந்த வெற்றியின் ஊடாக நாட்டினதும் மக்களினதும் நலனைப் பாதுகாப்போம்.


அதனால் மக்களின் பொருளாதார மற்றும் வாழ்வாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அரசு எடுக்கும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்படுவதுடன், மக்களின் உரிமைகளை மீறும் வகையிலும், அவர்களைப் பாதிக்கும் வகையிலும் அரசு தீர்மானங்கள் எடுத்தால், அதனை எதிர்த்துக் குரல் எழுப்பவும் பின்வாங்க மாட்டோம். எமது கட்சியின் செயற்குழுவுக்குப் புதிதாக 08 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சி என்பது ரணில் விக்கிரமசிங்கவோ, சஜித் பிரேமதாசவோ அல்லது கபீர் ஹாசீமோ கிடையாது. ஐ.தே.க. என்பது நாமே.
அன்றிலிருந்து இன்றுவரை ஐ.தே.கவைப் பாதுகாத்து வருவது கிராமங்களைச் சேர்ந்த எமது ஆதரவாளர்களே. இது வெறுமன் கட்சியல்ல, பலம் வாய்ந்த கட்சியாகும்.


இன்று இதன் தலைமைத்துவத்தை விட்டு ரணில் விக்கிரமசிங்க விலகிச் சென்றாலும் புதிய தலைவருடன் கட்சி முன்னேறிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.


தற்போது கட்சியின் ஆதரவாளர்கள் யாரைச் சுற்றி இருந்தாலும் அவர்கள் இறுதியில் யானைக்கே வாக்களித்துச் செல்வார்கள்.
மத்திய செயற்குழு நீக்கத் தீர்மானித்துள்ளவர்கள் விரும்பினால் மீண்டும் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *