Breaking
Sat. Apr 20th, 2024

அண்மையில் தான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.


சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜரான கருணா சுமார் 7 மணித்தியாலங்கள் வரை வாக்குமூலம் அளித்துள்ளார்.


இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கருணா,
நான் நடந்த உண்மையைக் கூறியிருக்கின்றேன். எதுவித தவறான கண்ணோட்டத்திலும் எதுவும் நான் கொடுக்கவில்லை. எவரையும் புண்படுத்தும் விதத்திலும் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இந்த நாட்டு மக்களை நாங்கள் நேசிக்கின்றோம். எங்களுடைய தேர்தல் பிரசாரம் தொடரும்.

ஆனால் எதுவித வன்முறையும் இனத்துவேசமும் இல்லாத விதத்தில் தேர்தல் பிரசாரத்தை கொண்டு செல்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்
எனது கருத்து தொடர்பில் நாட்டின் பல பாகங்களிலும் அரசியல்வாதிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.


அது தவறான விடயம். அந்தக் காலத்தில் நடந்த விடயத்தை ஒரு உவமைக்காக, மேடைப் பிரசாரமாக, தேர்தல் பிரசாரமாகக் கூறப்பட்ட விடயம். ஆகவே, இதை பூதாகரமாக்குவதில் எதுவித அர்த்தமும் இல்லை. எங்களுடைய அரசாங்கத்திற்கு சிங்கள மக்களின் வாக்குகளைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற பிரச்சினை இது. ஆகவே, இதை நாங்கள் முறியடித்து வெற்றியடைவோம்.


அம்பாறை மாவட்டத்தில் நாங்கள் ஒரு தனித் தமிழ் கட்சியாகப் போட்டியிடுகின்றோம். என்னைப் பொறுத்தவரையில் எந்தவொரு கட்சியினரையோ, எந்தவொரு மத குருமார்களையோ புண்படுத்துகின்ற மாதிரி எதுவும் கதைக்கவில்லை. அதேநேரத்தில், இராணுவத்தையும் நாங்கள் குறைக்க விரும்பவில்லை. எங்களது இராணுவம் பல சாதனைகளைப் படைத்து பல அனர்த்தங்கள் வருகின்ற போது மக்களை காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற இராணுவம். அந்த வகையில் நான் அதனை ஒரு நாளும் குறைத்து எதனையும் கூறவில்லை என பதிலளித்தார்.


ஆனையிறவு முகாமில் வைத்து ஒரே நாளில் மூவாயிரம் இராணுவத்தினரை தான் கொலை செய்ததாக கருணா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சை நிலையை அடுத்து இன்று குற்ற புலனாய்வு திணைக்களத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *