செய்திகள்பிரதான செய்திகள்

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது அதேநேரம்  ஈரான் மீதான தாக்குதலை கண்டிக்குமாறும், சியோனிசவாத ஆட்சியாளர்களுடனான உறவுகளைத் துண்டிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம் என சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் கடந்த தினம் ஈரான் மீது ஆரம்பித்த வான்வழி தாக்குதலை கண்டித்து சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான சியோனிச ஆக்கிரமிப்பை சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த 13ஆம் திகதி  சியோனிசவாத ஆட்சியாளர்கள் ஈரானின்  தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடங்கியது. குடியிருப்பு கட்டிடங்கள் அவர்களில் இலக்காக இருந்தன. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குகின்றனர்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவரும் நிலையிலே, ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த நடவடிக்கைகள் பிராந்தியத்தில் மேலும் யுத்த மோதல்களை தூண்டிவிடுவதற்கும், ஆயுத வியாபாரிகளுக்கு நன்மை பயப்பதற்கும், உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அழிப்பதற்குமான ஒரு முயற்சியாகும். ஏகாதிபத்தியத்திற்கு போரைத் தவிர வேறு தீர்வு எதுவும் தெரியாது. 

அமெரிக்கா இந்தத் தாக்குதலில் இருந்து விலகி உள்ளதுடன் இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஒருதலைப்பட்சமானவை என்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இருப்பினும், அமெரிக்காவிற்கு இந்தத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியே தகவல் தெளிவாகத் தெரியும். அதனாலே அமெரிக்கா தனது குடிமக்களை முன்கூட்டியே இப்பகுதியில் இருந்து வெளியேற்றி இருந்தது. 

அதுமாத்திரமல்ல, பலஸ்தீன், லெபனான், சிரியா மற்றும் இப்போது ஈரான் மீதான இஸ்ரேலின் மேலாதிக்கம் மற்றும் இனப்படுகொலை தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் உலகளாவிய வடக்கில் அதன் நட்பு நாடுகளின் நீண்டகால பொருளாதார மற்றும் இராணுவ ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஈரானுக்கு தாக்குதல் நடத்த பயன்படுத்திய  விமானங்களும் அமெரிக்காவின் உற்பத்திகளான F-35, F-15 மற்றும்  F-16 ரக ஜெட் விமானங்களாகும்.

உலகில் உள்ள அனைத்து தெற்கு நாடுகளும் பலஸ்தீன் மற்றும் ஈரான் மக்களுடன் ஒத்துழைப்புடன் இருக்கின்றன. இறையாண்மை கொண்ட ஈரானை தனிமைப்படுத்தி அழிப்பது அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் சியோனிச நட்பு நாடின் நீண்டகால உத்தியாகும். ஈரான் மீதான தாக்குதல்கள் ஏகாதிபத்தியத்தின் நீண்டகால உத்தியாக இருப்பதுடன் அவர்களின் பிரதான இலக்கு சீனாவாகும்.  ஈரானுக்கு தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை உண்டு. பலஸ்தீனியர்கள் தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பதை எதிர்க்கவும் உரிமை உண்டு.

எனவே, ஈரான் மீதான தாக்குதலை கண்டிக்குமாறும், சியோனிசவாத ஆட்சியாளர்களுடனான உறவுகளைத் துண்டிக்குமாறும், மேற்கு ஆசியாவில் இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது.

அத்துடன் இஸ்ரேலின் மிகவும் இழிவான சியோனிச ஆட்சிக்கு அனுசரணை வழங்குகின்ற ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் பாசிச சியோனிஸ்டுகளுக்கு எதிராக அணிதிறலுமாறு அமைதியை விரும்பும் சகல அரசியல் சக்திகளிடமும் சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது. 

Related posts

1ஆம் திகதியில் 7வரை அனைத்து இடங்களிலும் தேசிய கொடி தேவை

wpengine

ஆட்சிக்கு வரும் தலைவர்களின் காதலியே! ஹக்கீம்

wpengine

கிளிநொச்சி வெளிநோயாளர் புதிய கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர்

wpengine